டெஸ்ட் டிரைவ் திருட்டு- வடிவேலு பட பாணியில் OLX காரை திருடிய திருடன்: ஸ்கெட்ச் போட்டு திருடனை பிடித்த போலீஸ்!
ஆன்லைனில் பல்வேறு சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சில பொருட்கள் ஆன்லைனில் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் மக்கள் இதையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஓஎல்எக்ஸ் (olx) தளத்தில் விளம்பரம் செய்யப்பட்ட கார் ஒன்றை நூதன முறையில் திருடியவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுசார்ந்த தகவலைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது கடை கடையாக ஏறி இறங்கி,பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள்.

குறிப்பாக இந்தியாவில் சில ஆன்லைனில் தளங்கள் மக்களிடையே மிக பிரபலம் அடைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஎல்எக்ஸ். இவற்றில் சிறியபொருட்கள் முதல் வாகனங்கள் வரை அனைத்தும் வாங்கலாம் விற்கலாம். இந்நிலையில் ஓஎல்எக்ஸ் தளத்தில் 47 வயதான ரவீந்தரா எல்லூரி தனது காரை விற்பனை செய்யும் நோக்கில் விளம்பரம் செய்துள்ளார்.

பொறியியல் வல்லுநர் ஆன ரவீந்தரா எல்லூரி தன்னிடம் இருந்த மாருதி எஸ்.யூ.வி காரை தான் ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளார். இதற்கு சுமார் ஐந்து பேர் பதில் கொடுத்துள்ளனர். மேலும் அதில் ஒருவர் தான் எம்.ஜி வெங்கடேஷ் நாயக். ஆனால் அவர் குறித்த
எந்த விவரமும் ரவீந்தரா அறிந்திருக்கவில்லை.

கடந்த ஜனவரி 30-ம் தேதி மெசேஜ் மூலம் ரவீந்தராவை தொடர்பு கொண்டுள்ளார் நாயக். அதில் காரை வாங்க விரும்புவதாகவும், டெஸ்ட் டிரைவ்செய்ய வேண்டுமெனவும் சொல்லியிருக்கிறார். எனவே அவரிடம் கார் சாவியை அன்றைய தினமே கொடுத்துள்ளார் ரவீந்திரா.

டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி காரை எடுத்து சென்ற வெங்கடேஷ் நாயக் வெகுநேரம் கடந்தும் காரை கொண்டு வராத காரணத்தால் சந்தேகமடைந்த ரவீந்திரா போலீசில் அன்றே புகார் கொடுத்துள்ளார். உடனே அந்த புகாரின் பேரில் அவர் கொடுத்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த போன் வேறு ஒரு நபரிடமிருந்து திருடப்பட்டது என முதலில் கண்டறிந்துள்ளனர் போலீசார்.

அதன்பின்பு 2500-க்கு மேற்பட்ட ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து நாயக்கை கடந்த 10-ம் தேதி கைது செய்துள்ளனர். அவருக்கு வயது 36 என்று தெரியவந்தது. மேலும் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டில் தனது மனைவி கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதனால் தான் கடனாளி ஆகிவிட்டதாகவும், அந்த கடனை அடைக்கவே களவுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் நாயக். ஒரு திரைப்படத்தில் வடிவேலுவை ஜாமீனுக்கு வைத்துவிட்டு ஒருவர் பைக்கை ஓட்டிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு எடுத்துச் சென்றுவிடுவார், அதே போன்று நிஜத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


Click it and Unblock the Notifications