ஆன்லைன் வங்கி சேவை என்று நம்பியதால் 4 லட்சம் போச்சு! இவர் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்!
போலி ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் போலி வங்கி அழைப்பு ஆகிவற்றில் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை விரையமாக மோசடி கும்பலிடம் இழந்துவருகின்றனர். அப்படி பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தற்பொழுது 4 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். இவர் செய்த அதே தப்பை நீங்களும் செய்யாமல் இருக்கப் பாருங்கள், இல்லையெனில் உங்கள் பணத்தையும் இழக்க நேரிடலாம்.

பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராகினி (வயது 40). இவர் அனுமந்தநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தனது சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். ராகினி தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பண கையிருப்பு இருக்கிறது என்பதைப் பற்றி அறிய, இணையம் மூலம் வாடிக்கையாளர் தொடர்பு மைய செல்போன் எண்ணைக் கூகிளில் தேடியுள்ளார். இவர் செய்த மாபெரும் தவறே இது தான்.

இணையத்தில் சேவை மைய தொடர்பு எண் என்று குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு ராகினி தனது மொபைலிருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் சில தொழில்நுட்ப பிரச்சினை இருப்பதால் அவரின் வங்கிக் கணக்குடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரின் வங்கி கணக்கில் பண கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அழைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராகினியின் மொபைல் எண்ணுக்கு வேறொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது, வங்கியின் நிர்வாக பிரிவில் வேலை செய்யும் அதிகாரி போல் எதிர்முனையில் உள்ள நபர் ராகினியிடம் பேசியுள்ளார். உங்கள் வங்கி இருப்பு பற்றி அறிய உங்களுடைய வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு எண் ஆகியவற்றைத் தெரிவித்தால் மட்டுமே உங்களின் பண இருப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதை நம்பி ராகினியும் அந்த நபரிடம் தனது வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு எண் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார். அடுத்த சில நொடியில் ராகினியின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்துள்ளது, அதில் அவரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 700 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்து போனார் ராகினி.

அதிர்ச்சி அடைந்த ராகினி உடனே வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார், அப்போது தான் அவரை தொடர்பு கொண்ட நபர்கள் வங்கி அதிகாரிகள் இல்லை என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. மர்மநபர்களின் வலையில் எளிதாகச் சிக்கிய ராக்கினியிடமிருந்து பணத்தை அபேஸ் செய்துவிட்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகியுள்ளது. இது தொடர்பாக ராகினி வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இணையதளத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் சரியான தகவல் அல்ல, அதிலும் குறிப்பாக வங்கி தொடர்பான செல்போன் எண்கள், வங்கி தொடர்பான சேவை மைய எண்கள் ஆகியவை பெரும்பாலும் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டவையே. போலி எண்களுக்கு அழைப்பு விடுத்து, இந்த வலையில் வீணாய் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை இழக்கிறார்கள். வங்கியின் அங்கீகரிக்கப் பட்ட ஆப்ஸ் மூலம் மட்டும் உங்கள் வங்கி சேவையைப் பயன்படுத்துங்கள், இல்லை என்றால் சிக்கல் தான்.


Click it and Unblock the Notifications