55 நொடிகள் போதும்! சட்னி உடன் சுடச்சுட இட்லி கொடுக்கும் ATM.. விரைவில் தோசை, சோறு எல்லாமே
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட Freshot Robotics என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இல் எப்படி சுடச்சுட இட்லி வருகிறது என்ற கேள்வி வருகிறதா? பதிலை பார்க்கலாம் வாங்க.

தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் இட்லி
இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகளில் தவிர்க்க முடியாத ஒன்று இட்லி. லேசாக, மென்மையாக பஞ்சு போன்ற இட்லியை எந்த இடத்திலும் தவிர்க்க முடியாது.
சைவ வகைகளில் காலை உணவு இரவு உணவு என்று அமர்ந்தால் போதும் முதலில் இலையில் வருவது இட்லிதான் பிறகு தான் எல்லாம். அசைவத்தில் இட்லிக்கு இணையாக இருப்பது புரோட்டா இது வேற கதை. இட்லிக்கு வருவோம்.
இட்லியுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என்ற இணைப்பின் ருசி கண்டிப்பாக நம்மால் மறுக்க முடியாது.
உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரையும் இட்லி தான். இப்படி இட்லியின் முக்கியத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இட்லியிலும் தொழில்நுட்பம்
மாவை அறைத்து அதை இட்லி கொப்பரையில் ஊற்றி வேகும் வரை காத்திருந்து பின் எடுத்த காலம் எல்லாம் மலை ஏற போகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை பல கட்டம் முன்னோக்கி அழைத்து செல்கிறது. சாலை ஓரத்தில் இருக்கும் பாட்டி இட்லி கடைகள் எப்படி காலப்போக்கில் மறைந்து வருகிறதோ, அதேபோல் இட்லி அவிக்கும் காலமும் மலை ஏற இருக்கிறது. ஆம், அழகாக சூடாக இட்லி வழங்கும் ஏடிஎம் மெஷின் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இட்லி தயாரிக்கும் தானியங்கி இயந்திரம்
பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இட்லி தயாரிக்கும் தானியங்கி இயந்திரத்தை நிறுவி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் ஃப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த ஏடிஎம் இயந்திரத்தை தயாரித்து இருக்கிறது.

12 நிமிடங்களில் 72 இட்லிகள்
இது 24X7 இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தின் மூலம் 12 நிமிடங்களில் 72 இட்லிகளை வழங்க முடியும் என எகனாமிக் டைம்ஸ் தளம் தெரிவித்திருக்கிறது. இந்த இயந்திரம் இட்லிக்கான பொடி மற்றும் சட்னியையும் வழங்குவதாக என கூறப்படுகிறது.

க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து ஆர்டர்
ட்விட்டரில் இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோவில் உள்ள காட்சிகளை விரிவாக பார்க்கையில், மெனுவை பெற க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின் இதில் காட்டப்படும் உணவுகளை ஆர்டர் செய்து அப்படியே பணம் செலுத்தலாம்.

55 வினாடிகளில் டெலிவரி
ஏடிஎம் இயந்திரத்தில் இட்லிகள் புதிதாக அவிக்கப்பட்டு சுமார் 55 வினாடிகளில் பேக் செய்து இயந்திரத்துக்கு வெளியில் அனுப்பப்படுகிறது.
உடன் சட்னியும், பொடியும் இடம்பெறுகிறது. இதை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். வீடியோவில் காட்டப்படும் மெனுவில் உளுந்தவடையும் காட்டப்படுகிறது.

இட்லி ஏடிஎம் உருவாக்க காரணம் என்ன?
இதுகுறித்து ஷரன் ஹிரேமத், டெக்கான் ஹெரால்டிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், 2016 ஆம் ஆண்டில் அவரது மகன் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும் அந்த சமயத்தில் இரவில் எங்கும் இட்லிகள் சூடாக கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இதுபோன்ற உணவை எப்போதும் அணுகவதற்கான ஒரே வழி ஒரு தானியங்கி இயந்திரத்தை உருவாக்குவது தான் எனவும் அதன் விளைவே இந்த இயந்திரம் எனவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் தோசை, ரைஸ் ஏடிஎம் இயந்திரம்
பெங்களூரில் இந்த தானியங்கி இயந்திரம் இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதை பிற முக்கிய இடங்களிலும் விரிவுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இட்லியில் தொடங்கிய இந்த இயந்திரம் வரும் காலங்களில் தோசை, ரைஸ் மற்றும் ஜூஸ் என அனைத்துக்கும் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications