கொசு மாஸ்க் போடாது! கொரோனாவை விட மோசமானது 'இது' தான் என்று எச்சரிக்கும் பில்கேட்ஸ்!
உலகமே கொரோனா தொற்று, சமூக விலகல் என்று வெறும் கொரோனா பற்றிய பேச்சாக மட்டுமே இருக்கும் இந்த காலத்தில் மலேரியா என்னும் பெரும் தொற்றை நாம் மறந்துவிடக் கூடாது என்று பில்கேட்ஸ் தனது வலைப்பக்கத்தில் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

மனிதர்களை கொத்துக்கொத்தாக காவு வாங்கிய நோய்
கொரோனாவிற்கு முன்னதாக மனிதர்களை கொத்துக்கொத்தாக காவு வாங்கிய கொடூரமான நோய் மலேரியா என்னும் பெரிய தொற்று நோய் தான் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார். மலேரியா பற்றிய அச்சத்தையும் விழிப்புணர்வையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அவர் மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வந்துள்ளார்.

கொசுக்கள் மாஸ்க் அணிவதில்லை
கொரோனா வைரசிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் அனைவரும் சமூக விலகலுடன் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், கொசுக்களுக்கு சமூக விலகல் எல்லாம் தெரியாது, முக்கியமாகக் கொசுக்கள் மாஸ்க் அணிவதில்லை என்று அவர் கூறியுள்ளார். உலகிலேயே மிகவும் ஆபத்தான கொலைகாரப் பூச்சியான கொசுக்கள், மலேரியாவைப் பரப்ப நாள் கிழமை பார்ப்பதில்லை என்பதை யாரும் மறக்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.

மலேரியாவை ஒழிக்க பல தடுப்பு நடவடிக்கை
உலகமே முற்றிலுமாக கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில், கொசுக்களின் அராஜகம் இன்னும் நிற்காமல் தொடர்கிறது என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அவருடைய பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழியாக மலேரியாவை ஒழிக்க பல தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது
புதிய தடுப்பு ஆராய்ச்சிகளில் சில நல்ல முன்னேற்றங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், வசதியற்ற நாடுகளில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும், மக்களுக்குத் தேவைப்படும் கொசு வலை, மலேரியா ரத்த சோதனை கிட்டுகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை கொரோனா காலத்தில் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மலேரியா காய்ச்சல் விரைவில் பெரிய உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications