கொரோனா காலம்-1 மணிநேரத்திற்கு ரூ.90 கோடி அம்பானி வருமானம்: ஏழைகளின் நிலை?- வெளியான ஆய்வு அறிக்கை!
கொரோனா தொற்று பரவலின்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்பட்ட வித்தியாசம் குறித்து ஆக்ஸ்பாம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு சிக்கல்கள்
கொரோனா பரவல் உலகநாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வீட்டிலேயே முடங்கும் நிலை, வேலையின்மை, சம்பளக் குறைப்பு என பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

பங்குச் சந்தையில் தாக்கம்
அதேபோல் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பங்குச் சந்தை சரிய தொடங்கியது. பங்குகளின் மதிப்பு குறைந்து அதை சொந்தமாக வைத்திருப்போரின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது.

சிலமாதங்களில் தலைகீழாக மாறிய நிலைமை
இதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெருநிறுவன உரிமையாளர்கள் அதில் இருந்து மீள 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் இருந்து மீள சில மாதங்களே ஆனது என ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 9 மாதங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது.

ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கை
ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்(RIL) தலைவர் முகேஷ் அம்பானி ஒரு நொடியில் சம்பாதித்தை ஒரு திறமையற்ற தொழிலாளி (Unskilled Worker) சம்பாதிக்க மூன்று ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 மணிநேரத்தில் ரூ.90 கோடி வருமானம்
சமத்துவமின்மை வைரஸ் (inequality Virus) என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி அம்பானி ஒரு மணிநேரத்தில் 90 கோடி ரூபாய் சம்பாதித்தார். இதோடு ஒப்பிடுகையில் நாட்டில் சுமார் 24 சதவீத மக்கள் தொற்றுநோய் தாக்கத்தின் மாதத்திற்கு ரூ.3000 மட்டுமே சம்பாதித்துள்ளனர்.

ஆய்வறிக்கை விவரங்கள்
அதேபோல் குறைந்தது ஐந்து மாதங்களாவது 40 கோடி முறைசாரா தொழிலாளர்களை வறுமையில் இருந்து தள்ளி வைக்க அம்பானியின் செல்வம் மட்டும் போதுமானதாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி
ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா தொற்றின்போது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது.மார்ச் மாதத்தில் இருந்து அதாவது கொரோனா தொற்று நோய்களின்போது இந்தியாவின் முதல் 100 பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளது.

இரண்டு மடங்கு அதிகரித்த சொத்துமதிப்பு
ஆர்ஐஎல் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல் மார்ச் 18 ஆம் தேதி வரையிலான தகவலின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போது 78.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: indiatoday.in


Click it and Unblock the Notifications