மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?
செயற்கையாக மழை உருவாக்குவது, செயற்கையாகத் தீவுகளை உருவாக்குவது, செவ்வாயில் செடி வளர்ப்பது, நிலவில் மனிதர்கள் தங்கி மூன் பாத் எடுப்பது, விண்வெளி சுற்றுலா என்ற மனிதர்கள் இயற்கைக்கு அப்பால் பல வினோதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி அடைந்தும் வருகிறனர். அந்த வரிசையில், மனிதர்கள் நீண்ட காலமாக மாற்ற நினைக்கும் ஒரு முக்கியமான விஷயம் மரணம். ஆம், மனிதனின் வயதாகும் தன்மையைக் கட்டுப்படுத்தி மரணத்தை வெல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை மனிதன் திறப்பானா?
உண்மையைச் சொல்லப் போனால், பல ஆண்டுகளாகப் பல விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இந்த விசித்திரமான ஆசையைச் சாத்தியமாக்க முயன்று தோல்வியுற்றனர். மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை மனிதன் அடைவது சாத்தியமற்றது மற்றும் இது இயற்கைக்குப் புறம்பானது என்றும் சிலர் முயற்சியைக் கைவிட்டுவிட்டனர்.ஆனால், இப்போது அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ், மரணம் இல்லாத அழிவற்ற வாழ்க்கையின் கதவுகளைத் திறந்தாக வேண்டும் என்ற முயற்சியில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளார்.

மரணம் இல்லாத வாழ்க்கைக்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆய்வகம்
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் வயதாவதைத் தாமதப்படுத்த விரும்புகிறார். அமேசான் நிறுவனர் மற்றும் விண்வெளி ஆர்வலரான ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் ஆல்டோஸ் ஆய்வகத்திற்கு நிதி உதவியை வழங்கியுள்ளார். இந்த ஆல்டோஸ் ஆய்வகம் மனிதனுக்கு இருக்கும் மிக மோசமான இயற்கை நோய்களில் ஒன்றான மரணத்தைத் தீர்க்க முயற்சிக்கிறது. ஆம், இந்த ஆய்வகம் தான் இப்போது மரணம் இல்லாத வாழ்க்கைக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மரணம் இல்லாத வாழ்க்கையை கண்டுபிடிக்க ஜெஃப் பெசோஸ் வழங்கிய நிதி உதவி
இந்த ஆய்வகத்திற்கு ஜெஃப் பெசோஸ் இப்போது நிதி உதவி வழங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எம்ஐடி டெக் ரிவியூவால் இது முதலில் அறிவிக்கப்பட்டது, ஆல்டோஸ் லேப்ஸ் யூரி மில்னர் மற்றும் அவரது மனைவி ஜூலியா என்ற ரஷ்ய கோடீசுவரரிடமிருந்தும் நிதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிவிட்டர், ஸ்பாட்டிஃபை, பேஸ்புக் மற்றும் ஏர்பிஎன்பி போன்ற பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மில்னர் மிகவும் பிரபலமானவர்.

மனிதனின் வயதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் துவங்கிய ஆராய்ச்சி
உலகளவில் பல நிறுவனங்களில் இவர் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆல்டோஸ் லேப் பயணம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து தொடங்கப்பட்டது. இப்போது, நிறுவனம் ஜப்பான் உள்ளிட்ட பல பெயரிடப்படாத பிரதேசங்களில் தனது ஆய்வகங்களையும், நிறுவனங்களையும் நிறுவ முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசைப்பட்டு நினைத்ததை முடித்து காட்ட துடிக்கும் ஜெஃப் பெசோஸ்
அமேசான் நிறுவனம் வழக்கம் போலத் தேவைக்கு அதிகமான அதிக சம்பளத்தை வழங்குவதன் மூலம் முக்கிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளையும் உள்வாங்க முயல்வதாகத் தெரிகிறது.அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ், இது போன்ற முயற்சிகளுக்கு புதியவர் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.இதற்கு முன்பும் ஜெஃப் பெசோஸ் அதிக சம்பளம் கொடுத்து தனக்கு வேண்டிய நபர்களைத் தனது வட்டத்திற்குள் வைத்துக்கொள்வதில் இவர் கெட்டிக்காரர்.

மனிதனின் மரண பிரச்சனையைத் தீர்க்க முதலீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
இப்போது, ஜெஃப் பெசோஸ் சுமார் $200 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்புடன், தொடர்ச்சியான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதில் உள்ள மற்ற நிறுவனங்கள் கூட மனிதனின் மரண பிரச்சனையைத் தீர்க்க முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நியூயார்க் போஸ்ட்டின் தகவல் படி, ஜெஃப் பெசோஸ் யூனிட்டி பயோடெக்னாலஜி என்ற ஸ்டார்ட்-அப்பில் கூட முதலீடு செய்துள்ளார்.

முதுமை நோய்யை தடுக்கும் ஆராய்ச்சி துவங்கியது
இது மனிதனுக்கு இருக்கும் முதுமையின் "நோய்களைத் தடுக்க அல்லது மாற்றியமைக்க" செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வயதானதை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தைப் பற்றி விவாதிக்க விஞ்ஞானிகள் குழு கடந்த ஆண்டு இரண்டு நாள் மாநாட்டிற்காக சந்தித்தது. விஞ்ஞானிகள் விலங்குகளைப் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.

மனிதனின் உடலில் இறக்கும் செல்களை புதுப்பிக்கும் முயற்சி கைகொடுக்குமா?
பின்னர் இந்த மாநாடு ஆல்டோஸ் ஆய்வகங்களின் உருவாக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் குறிக்கோளுடன் இந்த ஆராய்ச்சி துவங்கியுள்ளது. குறிப்பாக மனிதனின் உடலில் இறக்கும் செல்களை புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி அடையும் என்று நிறுவனம் நம்புகிறது. இது சாத்தியமாகிவிட்டால், இதைத் தொடர்ந்து மரணம் இல்லாத வாழ்க்கையை மனிதன் அடைவது சுலபமானது என்று நம்பப்படுகிறது.

மரணம் இல்லாத வாழ்க்கை வரவேற்கப்படுமா?
மரணம் இல்லாத வாழ்க்கை, வயதை வளர விடாமல் தடுத்து நிறுத்துவது, அழியாமையைத் தொடர இது ஒரு உன்னத இலக்கு என்று ஜெஃப் பெசோஸ் நினைப்பது சரியானது தானா? மரணம் இல்லாத வாழ்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகினால் மனித இனம் என்னவாகும்? பூமி தாங்கிக்கொள்ளுமா? இயற்கை எய்தும் மனிதனின் செயற்கை உயிர் வாழும் முறை வரவேற்கப்படுமா? என்ற இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில் என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications