அன்லிமிடெட்-க்கு ஆப்பு.. Google Pay, Paytm பயனர்களுக்கு வரப்போகும் புது சிக்கல்!
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் நமது தினசரி வேலையைக் கூட எளிமையாக்குகிறது என்றே கூறலாம்.

ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை
மேலும் இப்போது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

கூகுள் பே, போன்பே,பேடிஎம்
இந்நிலையில் யுபிஐ செயலிகளான கூகுள் பே, போன்பே,பேடிஎம் போன்றவற்றில் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு விரைவில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கட்டுப்பாடு ?
குறிப்பாகப் பயனர்கள் தற்போது கணக்கில் வராத ஏராளமான பணத்தைப் பரிமாற்றம் செய்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்குக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்பிசிஐ
மேலும் தற்போது யுபிஐ-ஐ செயல்படுத்திவரும் தேசிய பேமெண்ட கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ),ரிசர்வ் வங்கியுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளது. பின்பு வெளியான தகவல்களின்படி, தற்போது யுபிஐ செயலிகள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து,அந்த பரிந்துரையை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது கூகுள் பே, போன்பே, பேடிஎம் செயலிகளில் கணக்கு வைத்திருப்போர் ஒரு நாளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் இந்த புதிய வழிமுறை கொண்டுவரப்பட்டால் இனிமேல் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட பணப்பரிமாற்றம் மட்டும் செய்ய முடியும். இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

30 சதவீதம் குறைக்க வேண்டும்
அதேபோல் மூன்றாம் தரப்பு செயலிகள் வழங்கும் நிறுவனங்களுக்கும் பரிமாற்றத்தின் அளவை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று என்பிசிஐ பரிந்துரைத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து அம்சங்களுடன் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த கூட்டத்தில் நிதியமைச்சக அதிகாரிகள், என்பிசிஐ அதிகாரிகள், ஆர்பிஐ அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி முடிவு?
இருந்தபோதிலும் கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளில் பரிமாற்றம் செய்வதற்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. அதாவது என்பிசிஐ தனது பரிந்துரையை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, அந்த பரிந்துரையை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்துங்கள் என்று மட்டும் தான் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் என்பிசிஐ அமைப்பு தனது இறுதி முடிவை அதாவது செயலிகள் பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவை எடுக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications