அலிபாபா நிறுவனர் ஜாக் மா கைது செய்யப்பட்டாரா?- ஜாக்மாவின் நிலை என்ன?: நீடிக்கும் மர்மம்!
சீன இகாமர்ஸ் தளமான அலிபாபா குழுமத்தின் தலைவரான ஜாக் மா காணாமல் போகிவிட்டாரா எங்கே இருக்கிறார் என்ற கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் குரூப் ஐபிஓவை சீனா சமீபத்தில் தடை செய்தது.

கடுமையான நெருக்கடியில் ஜாக்மா
சீன அரசின் கடுமையான நெருக்கடியால் ஜாக்மா அந்தஸ்து இழக்கும் நிலை ஏற்பட்டது. ஜாக்மா தலைமையில் செயல்படும் ஆன்ட் ஐபிஓ வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை என சீன அரசால் ஐபிஓ தடை செய்யப்பட்டது.

அலிபாபா தீவிர வளர்ச்சியடையும்
இதற்கு சீன அரசின் முக்கிய காரணம், அலிபாபா கொள்கையை ஏற்றுக் கொண்டால் அலிபாபா தீவிர வளர்ச்சியடையும் எனவும் பிற நிறுவனங்கள் வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகும் எனவும் சீன அரசு கவலை கொண்டதாக சீன பத்திரிக்கை ஒன்று தெரிவித்தது. மேலும் இதற்கு அரசியல் ரீதியிலான காரணம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சீன அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள்
அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் சீன அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை ஜாக் மா முன்வைத்தார். தொடர்ந்து அலிபாபா நிறுவனம் மீது சீனா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அலிபாபா நிறுவனம் அதன் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பை தராமல் வஞ்சகமாக செயல்படுகிறது என விசாரணை தொடங்கப்பட்டது.

வெளியில் தோன்றாமல் இருந்த ஜாக் மா
இதற்கிடையில் இரண்டு மாதங்களாக ஜாக் மா வெளியில் தோன்றாமல் இருந்தார். அதேபோல் புதிய தொழில்முனைவோர்கள் கண்டறியும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக் மா நடுவராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஜாக் மாவுக்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறு அதிகாரி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த அதிகாரி ஜாக்மா வேறு பணி இருப்பதால் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு செல்ல தடை
இந்த நிலையில் ஜாக் மாவின் அலிபாபா குழுமத்தில் சட்டமீறல் ஏற்பட்டதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் பொது வெளியில் ஜாக்மா தோன்றவில்லை. இதற்கிடையில் ஜாக் மா கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

ஜாக்மா சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்?
சமூகத்தில் மதிப்புடையவர்கள் சீன அரசால் கைது செய்யப்பட்டால் அவர்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். அதோடு அவர்களின் விவரங்களும் வெளியிடப்பட மாட்டாது. இதையடுத்து ஜாக்மா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கோ அல்லது வீட்டுக் காவலில் இருப்பதற்கோ அதிக வாய்ப்பு இருக்கிறது என ஹாங்காங் தி ஏசியா டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications