விலை குறைக்கும் போட்டி : மீண்டும் மல்லு கட்டும் நிறுவனங்கள்.!
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் விலை குறைக்கும் போட்டி மீண்டும் துவங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சலுகைகளை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதன் படி இந்நிறுவனங்களின் டேட்டா சேவைக் கட்டணங்கள் மீண்டும் குறைக்கப்படலாம் எனத் தொலைத்தொடர்பு நிறுவன வட்டாரங்கள் சார்பில் கூறப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ சேவை கட்டணங்கள் ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு சந்தையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் ஜியோ போட்டியை சமாளித்து ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள மீண்டும் தங்களது சேவைக் கட்டணங்களை குறைக்கலாம் எனச் சந்தை வல்லுநர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைந்த காலகட்டத்தில் சுமார் 10 கோடி வாடிக்கையாளர் என்ற எண்ணிக்கையை உயர்த்த முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதார். இந்நிலையில் ஜியோ வரவு தொலைத்தொடர்பு சந்தையில் விலை குறைக்க வழி செய்யும் எனக் கூறப்படுகின்றது.

தொலைத்தொடர்பு சந்தையின் புதிய போட்டி ஆரம்பமாகிவிட்டது. இப்போட்டியில் ரிலையன்ஸ் ஜியோ பக்கம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் ஒருபக்கமும் மறுபுறம் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவனங்களும் இருக்கின்றது என இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் அமைப்பின் ஜிஎஸ்எம் பிரிவு தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்படும் முன்பே பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்திருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் குறைக்கப்பட்ட புதிய விலை பட்டியலில் எந்தளவு மாற்றங்கள் இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications