சுத்தம்.. Airtel சிம் கார்டுக்கு கும்பிடு.. மீண்டும் ரீசார்ஜ் விலை உயர்வு.. Gopal Vittal போட்ட புது குண்டு!
கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் ஏர்டெல் தான் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவித்த முதல் டெலிகாம் நிறுவனமாக இருந்தது. அதன் பின்னரே முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தத்தம் கட்டண விலை உயர்வை அறிவித்தன. தற்போது ஏர்டெல் நிறுவனம் மீண்டும் "அதே போன்ற ஒரு வேலையை" பார்க்க உள்ளது போல் தெரிகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்.டி ஆன கோபால் விட்டல் (Airtel CEO and MD Gopal Vittal), தொழில்துறை அளவிலான மற்றொரு கட்டண உயர்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த துறையில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் (Returns on capital employed - ROCE) வருமானம் இந்தியாவில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது என்று வாதிட்டார்.

ஏர்டெல் நிறுவனத்தின் இருப்புநிலை உறுதியாகத்தான் உள்ளது, பண உருவாக்கம் மற்றும் தொடர்ச்சியான டெலிவேஜிங் மூலம் ஆதரிக்கவும் படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஏர்டெல் நிறுவனமானது ரூ.8,465 கோடி (அதிக விலை ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகை) தவணையை முன்கூட்டியே செலுத்தியும் உள்ளது. ஆனாலும் இந்தியாவிற்கான ரோஸ் (ROCE) இன்னும் 11 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், தொழில்துறைக்கு நீடித்த முதலீடுகளுக்கான கூடுதல் கட்டண சரிசெய்தல் தேவை என்று நம்புவதாக கோபால் விட்டல் கூறியுள்ளார்.
நினைவூட்டும் வண்ணம் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய டெலிகாம் ஆபரேட்டர்கள் 2 முறை மொத்தமாக 40 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். குறிப்பாக கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்த விலை உயர்வானது "அநியாயமான" விலை உயர்வாக பார்க்கப்பட்டது. இதன் விளைவாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனத்தின் கீழ் இருந்த பல கஸ்டமர்கள் (இன்னமும்) பிஎஸ்என்எல் சேவைக்குள் நுழைந்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில் நல்ல முறையில் லாபம் பார்த்து வரும் ஏர்டெல் நிறுவனம் அடுத்த விலை உயர்விற்கு "உடனே" அடிபோடுவது அதிர்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில்.. பல ஏர்டெல்கஸ்டமர்கள் தங்களுடைய சிம் கார்டுகளுக்கு கும்பிடு போடுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்போதைக்கு ஏர்டெல்லின் அடுத்த ரீசார்ஜ் விலை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்கிற எந்த தகவலும் இல்லை. ஆகையால் நாம் எந்த முடிவிற்கும் வர முடியாது!
முன்னரே குறிப்பிட்டபடி, பார்தி ஏர்டெல் நிறுவனம் நல்ல லாபத்தை பார்த்து வருகிறது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில், இந்த டெலிகாம் ஆபரேட்டரின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.41,473 கோடியாக இருந்தது. இது ஆண்டு அடிப்படையில் 12% மற்றும் காலாண்டு அடிப்படையில் 7.7% உயர்வாகும்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த EBITDA ரூ.22,021 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 12% சதவீதம் வளர்ச்சியடைந்து, EBITDA வரம்பு 53.1% சதவீதத்தைக் குறிக்கிறது. காலாண்டில் இந்நிறுவனத்தின் இந்திய வருவாய் ரூ.31,561 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 16.9% சதவீதம் அதிகரித்துள்ளது.
தரமான வாடிக்கையாளர்களுடன் தனது போர்ட்ஃபோலியோவை பிரீமியமாக்குவதற்கு, இடைவிடாது கவனம் செலுத்துவதன் மூலமும், கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்த ரீசார்ஜ் கட்டண உயர்வு மூலமும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் வருவாய் ஆனது ஆண்டுக்கு ஆண்டு 18.5% சதவீதம் அதிகரித்தும் உள்ளது.
மேலும் பார்தி ஏர்டெல் நிறுவனமானது, தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஏஆர்பியு-வை (அதாவது ஒரு பயனருக்கு சராசரி வருவாய்) வளர்ச்சியைத் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.203 ஆக இருந்த ஏஆர்பியு (ARPU) தற்போது ரூ.233 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில், இணைப்பை மேம்படுத்தவும், சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்கவும், கூடுதலாக 5,000 டவர்கள் மற்றும் 15,200 மொபைல் பிராட்பேண்ட் நிலையங்களையும் ஏர்டெல் உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









Stay Connected