அன்லிமிடெட் 5G-னு சொல்லிட்டு ஹாட்ஸ்பாட் கட்டுப்பாடா? ஏர்டெல்லை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!
ஏர்டெல் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்கள், அந்த டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பிறருடன் பகிரும்போது இணைய சேவை செயல்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பிரபல டெக்கி ஒருவர் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அதில், ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்றவர்களுடன் பகிர முடியாது என்பது நிறுவனத்தின் விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து சலுகைகளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பல பயனர்கள் ஹாட்ஸ்பாட் பயன்பாட்டுக்கான இந்தக் கட்டுப்பாடு குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரியவில்லை என்று தெரிவித்தனர். மேலும், ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5G திட்டங்களை விளம்பரப்படுத்தும் போது, இதுபோன்ற முக்கிய நிபந்தனைகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வரம்பற்ற 5ஜி டேட்டா குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில், அதனை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது என்று கூறியுள்ளது .தற்போது அந்நிறுவனம் இறுதியாக அதை எழுத்துப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. இதைப்பற்றி கீழே இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகை, 5G ஸ்மார்ட்போன் பயன்படுத்தி Airtel 5G Plus சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை Airtel செயலி மூலம் ஆக்டிவேட் செய்த பிறகு, பயனர்கள் தங்களது மொபைல் போனில் வரம்பற்ற 5G டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.
ஆனால், இந்த சலுகைக்கான விதிமுறைகளில் ஒரு முக்கிய நிபந்தனை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்லிமிடெட் 5G டேட்டா தனிப்பட்ட மொபைல் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்றவர்களுடன் பகிரவோ அல்லது பிற சாதனங்களுக்கு இணைய இணைப்பாக பயன்படுத்தவோ அனுமதி இல்லை என்று ஏர்டெல் விளக்கியுள்ளது.
ஏர்டெல்லின் இந்த நடைமுறை சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது என்ற நிபந்தனை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, "மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாத 5G டேட்டாவை எப்படி 'அன்லிமிடெட்' என்று விளம்பரம் செய்ய முடியும்? இத்தகைய கட்டுப்பாடு இருந்தால், அதை வரம்புகளுடன் கூடிய சலுகை என்று தெளிவாக குறிப்பிட வேண்டாமா?" என்று சமூக வலைதளப் பயனர் ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு பயனர், தாங்கள் அலுவலகப் பணிக்காக சில நேரங்களில் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நம்பியே லேப்டாப்பில் இணையத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அன்லிமிடெட் டேட்டாவுக்காக கட்டணம் செலுத்திய பிறகும், ஹாட்ஸ்பாட் வசதிக்கு கட்டுப்பாடு விதிப்பது அந்தத் திட்டத்தின் முழுப் பலனையும் பெற முடியாத நிலையை உருவாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் "அன்லிமிடெட் டேட்டா" என்று விளம்பரம் செய்தாலும், நடைமுறையில் அதிவேக இணையம் குறிப்பிட்ட அளவு டேட்டா பயன்படுத்தும் வரை மட்டுமே கிடைக்கிறது. அந்த வரம்பை கடந்த பிறகு இணைய வேகம் கணிசமாகக் குறைக்கப்படுவதால், "அன்லிமிடெட்" என்ற விளம்பரத்துடன் இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்தும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
source: 91mobiles


Click it and Unblock the Notifications