இன்னும் 2 வாரத்தில் அமல்.. OTP க்கு செக்.. பேங்க் அக்கவுண்ட் Airtel நம்பர் உடன் லிங்க் ஆகி இருக்கா.. அப்போ?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியை எதிர்ப்பதற்காக, பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஏஐ அடிப்படையிலான மோசடி எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் ஹரியானாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 வாரத்தில் அப்படி என்னென்ன மாறப்போகிறது? ஏர்டெல் நிறுவனத்தின் ஏஐ அடிப்படையிலான புதிய மோசடி எச்சரிக்கை அமைப்பு (Airtel AI-powered fraud alert system) ஆனது சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்பின் போது, வங்கி தொடர்பான ஒடிபி-ஐ (OTP) பகிரும் அபாயத்தில் உள்ள வாடிக்கையாளர்களை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு உள்ளது.

இந்த அம்சம் நெட்வொர்க் மட்டத்தில் செயல்படுகிறது. அதாவது - ஏர்டெல் நிறுவனத்தால் ஏற்கனவே அறியப்பட்ட மோசடி முறைகளுடன் பொருந்தக்கூடிய உள்வரும் அழைப்பில் ஈடுபட்டுள்ள ஒரு வாடிக்கையாளர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அவர் மோசடி அழைப்பில் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது!
அந்த நேரத்தில் வங்கி தொடர்பான ஒடிபி ஒன்று வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை அடையாளம் காணும்படி, இந்த மோசடி எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட துல்லியமான தருணத்தில், ஏர்டெல் ஒரு நிகழ்நேர எச்சரிக்கையைத் தூண்டும்; அதன் மூலம் அந்த ஒடிபி-ஐ யாருடனும் பகிர வேண்டாம் என்று பயனரை எச்சரிக்கும்.
ஏர்டெல்லின் இந்த நடவடிக்கை ஒரு மோசடி நிகழ்வுக்கு பிறகு வரும் - ஆப் அடிப்படையிலான மோசடி எச்சரிக்கைகள் அல்லது வங்கி ஆலோசனைகளை போலல்லாமல், நேரடி அழைப்பின் போது ஒரு பயனர் ஒடிபி -ஐ பகிர அழுத்தம் கொடுக்கப்படும்போது, மோசடி பொதுவாக வெற்றிபெறும் சரியான இடத்தில் - ஏர்டெல்லின் இந்த பாதுகாப்பு அமைப்பு தலையிட முயற்சிக்கிறது.
அழைப்பின் தன்மை, வங்கிகளில் இருந்து ஒடிபி டெலிவரி செய்யப்படும் நேரம் மற்றும் அறியப்பட்ட மோசடி முறைகளுடன் தொடர்புடைய நடத்தை முறைகள் உள்ளிட்ட பல சமிக்ஞைகளை இந்த அமைப்பு நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்கிறது. இந்த சமிக்ஞைகள் சீரமைக்கப்படும்போது, ஒடிபி தவறாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பயனருக்கு எச்சரிக்கை கிடைக்கும்.
முக்கியமாக, இந்த அம்சத்திற்கு எந்த ஆப்பையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை; மேலும் உங்களிடம் எந்த ஸ்மார்ட்போன் இருந்தாலும், அதற்கான இணக்கத்தன்மை குறித்து கவலைப்பட தேவையில்லை மற்றும் வாடிக்கையாளர் பக்கம் இருந்து எந்த நடவடிக்கையும் செய்ய தேவையில்லை. இந்த பாதுகாப்பு முழுக்க முழுக்க ஏர்டெல்லின் நெட்வொர்க் நுண்ணறிவு மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.
இதுபோன்ற மோசடி சூழ்நிலைகளைக் கண்டறிவதில் அதிக அளவிலான துல்லியத்துடன் இந்த அமைப்பு விரிவான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் வளர்ந்து வரும் மோசடி போக்கை குறைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இதன் கீழ் மோசடி செய்யும் அழைப்பாளர்கள் - டெலிவரி முகவர்கள், வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகிகள் அல்லது வங்கி பிரதிநிதிகளை போல ஆள்மாறாட்டம் செய்து, நிதி பரிவர்த்தனைகளுக்கான ஒடிபி-களை பகிர வைக்கும் சூழ்நிலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து பேசுகையில் - "ஏர்டெல்லை பாதுகாப்பான நெட்வொர்க்காக மாற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்," என்று ஏர்டெல் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஷ்வத் சர்மா கூறினார். "எங்கள் ஏஐ அடிப்படையிலான இந்த அட்டாநமஸ் சொல்யூஷன் ஆனது, நிகழ்நேரத்தில் மோசடி நடவடிக்கைகளை கண்டறிந்து தலையிட நெட்வொர்க் மட்டத்தில் முன்கூட்டியே செயல்படுகிறது" என்றும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏர்டெல் ஸ்பேம் அழைப்பு அடையாளம் காணல் மற்றும் தீங்கிழைக்கும் இணைப்பு தடுப்பு போன்ற ஏஐ ஆல் இயக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிகள் பல வகையான மோசடிகளை குறைத்தாலும், வாய்ஸ் கால்கள் மூலம் நடக்கும் மோசடிகளை பெரிதும் குறைக்கவில்லை; இந்த புதிய ஒடிபி பாதுகாப்பு முறை, அதை செய்யும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








