பெற்றோருக்கு மாற்றாக வரும் AI டெடி பியர்! இது வரமா? சாபமா?
பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலமும், 'பாட்டி வட சுட்ட கதை' சொன்ன காலமும் மலையேறி போய்க்கொண்டிருக்கும் வேளையில், இப்போது, வீட்டுப்பாடங்களை சொல்லிக்கொடுக்கும் காலமும் செயற்கை நுண்ணறிவால் முடிவுக்கு வரப்போகிறது. இது வரமா? சாபமா? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சாட்ஜிபிடியின் (ChatGPT) வருகை, உலகம் முழுவதும் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்பத்துறையை கடந்து, மற்ற எல்லா துறைகளிலும், சாட்ஜிபிடியின் ஆதிக்கத்தை பார்க்க முடிகிறது. இப்படி கூட சாட்ஜிபிடியை பயன்படுத்த முடியுமா என்று அதை கண்டுபிடித்த ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனமே வியக்கும் வகையில், நாள்தோறும் புதுப்புது காரியங்களுக்கு சாட்ஜிபிடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கலை, கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளை பற்றியும் அறிந்த ஞானியை போல, கேட்கும் கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைகழக ஆய்வு மாணவர்கள் வரையில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக, இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தவொரு தொழில்நுட்பமும், வருங்காலத்தில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், சில விஷயங்களில் பெற்றோருக்கு மாற்றாகவே, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு வரப்போகிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறாதா? ஆம் வருங்காலத்தில், பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை நிலாவை காட்டியோ, பழைய கதைகளை சொல்லியோ தூங்க வைக்க வேண்டாம். அதேபோல வீட்டுப்பாடங்களையும், அவர்களின் சந்தேகங்களையும் தீர்க்க நேரம் ஒதுக்க வேண்டாம். அந்த வேலையை, ஒரு ஏஐ டெடி பியர் (AI Teddy Bear) பார்த்துக்கொள்ள போகிறது.
ஹாங் காங்கில் செயல்பட்டுவரும் மிகப்பெரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான விடெக் (VTech), குழந்தைகளுக்கான ஸ்மார்ட் டாய்ஸ்கள் (Smart Toys) தயாரிப்பில், உலகளவில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனம், பள்ளிக்கு செல்லும் முன் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையிலான டாய்ஸ்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
எந்த புதிய தொழில்நுட்பம் வந்தாலும், அதை குழந்தைகளுக்கான டாய்ஸில் கொண்டுவந்து, அசத்தி வருகிறது. இப்போது, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களையும் டாய்ஸ்களில் கொண்டுவந்து, குழந்தைகளிடையே உரையாட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, விடெக் சிஇஓ ஆலன் வாங் (VTech CEO Allan Wong) கூறுகையில், "வரும்காலத்தில், குழந்தைகளும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை (AI Chatbot) பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
2028ஆம் ஆண்டில் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட், குழந்தைகளின் டாய்ஸ்களில் கொண்டுவரப்படலாம். அப்போது, குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பது முதல் சந்தேகங்களை தீர்த்து வைப்பது வரையில், அந்த டாய்ஸ்களே பார்த்துக்கொள்ளும். ஒரு நண்பனை போல அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். இது தொடர்பான முயற்சிகளில் விடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
சொல்லப்போனால், ஏஐ சாட்பாட்கள் மனிதர்களைவிட திறமையாக கதை சொல்வது மட்டுமல்லால், வீட்டுப்பாடங்களையும் இன்டர்நெட்டை பார்க்காமல் சொல்லிக்கொடுக்கும் திறனை கொண்டிருக்கும். அதனுடன் பெற்றோர்கள் போட்டி போட முடியாது, என்பதால் குழந்தைகளுக்கு விருப்பமானதாக அவை மாறலாம். பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அவர்களுடன் இருந்து நம்பிக்கையைும் பெறலாம்.
ஒருபக்கம், இது மிகப்பெரும் வரவேற்பை பெறப்போகிறது என்றாலும், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான தூரத்தை மேலும் அதிகரிக்கவும் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications