அக்னிபாத் திட்டம்: மத்திய அரசிடம் சிக்கிய 35 வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு ஆப்பு! என்ன நடந்தது?
மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது. ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படைகளிலும் தற்காலிமாக இளைஞர்கள் பணி புரிவதற்கு இந்த திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியில் இணையும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் பணிபுரிய முடியும். இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட காரணம் என்னவென்று பார்க்கலாம்.

அக்னிபாத் குறித்த அறிவிப்பு
கடந்த ஓரிரு ஆண்டுகளாவே ராணுவ ஆட்சேர்ப்பு குறித்த பெரிய அளவிலான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்த்து ராணுவத்தில் இணைய ஏராளமான இளைஞர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தான் அக்னிபாத் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணியில் இணையும் பணியாளர்கள் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும் என கருத்துக்கள் எழத் தொடங்கின. மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து வலுக்கத் தொடங்கிய போராட்டங்கள்.

இளைஞர்களுக்கான திட்டமாக அறிவிப்பு
அக்னிபாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 23 வயது வரையிலான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். ஒரு வீரர்கள் முழுமையாக பயிற்சி பெற்று போராளியாக மாறுவதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை எடுக்கும் என கூறப்படுகிறது.

வேலையில்லா சூழலை உருவாக்கும் என கருத்து
இந்த நிலையில் 4 ஆண்டுகள் மட்டுமே அக்னிவீரர்களுக்கு பணி என்பது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 30,000 வீரர்கள் வேலையில்லாதவர்களாக மாறுவார்கள் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நான்கு வருடம் பணியாற்றும் அக்னிவீரர்கள்
அக்னிபாத் திட்டத்தில் நான்கு வருடம் பணியாற்றும் அக்னிவீரர்களின் பணிக்காலம் முடிந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் இருந்து 25% பேர் நிரந்தர ராணுவ பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டமானது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவா நிதியாக அரசு வழங்கும் தொகை
இந்த 4 ஆண்டுகள் முடிந்த பின் ரூ.11 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சேவா நிதியாக அரசு வழங்கும். அக்னிபாத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்த இளைஞர்களுக்கு அடுத்த தொழில் தொடங்க இந்த தொகை உதவியாக இருக்கும் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. அப்போது ஏன் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் என்ற கேள்வி வரலாம்.

பல மாநிலங்களில் போராட்டம்
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் அக்னிபாத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ராணுவத்தில் ஒப்பந்த பணியாளர்கள் என்பது ராணுவ திறனை பாதித்துவிடும். ராணுவ ஒழுங்கு சீர்குலையும். அக்னிவீரர்களாக பணியாற்றும் வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பின் வேலை இல்லாமல் சிரமப்படுவார்கள் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை
இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் பொய்யான தகவலை பரப்பி இளைஞர்களை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் கீழ் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்களால் பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. போராட்டங்களை தீவிரப்படுத்த வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications