வேலையை விட்டு நின்றால் PF அக்கவுண்டுக்கு வட்டி வராதா? கவலைப்படாதீங்க.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..
EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதியைக் கொண்டுவர உள்ளது. இது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது EPFO அமைப்பு. அதேபோல் தற்போதைய காலகட்டத்தில் பணி மாற்றம் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால் ஒரு பணியாளர் வேலையை விட்டு விலகும்போது, அவரின் முதல் கேள்வி, பழைய நிறுவனத்தில் இருந்த பிஎப் (PF) கணக்கு என்னவாகும், அதில் சம்பளம் வராததால் வட்டி நின்றுவிடுமா என்பது தான். குறிப்பாக பல்வேறு மக்கள் வேலையை விட்டு நின்றவுடன் வட்டி கிடைக்காது என்று நினைத்து அவசரமாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இது குறித்த உண்மையான விதிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது முன்பு இருந்த ஒரு பழைய நடைமுறையின்படி, ஒரு பிஎப் கணக்கில் மூன்று ஆண்டுகள் எந்தவொரு பணமும் டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், அது செயல்படாது கணக்காக (Inactive Account) கருதப்பட்டு வட்டி நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை நிலவியது. இதனால் பலர் நீண்ட கால கூட்டு வட்டி (Compound Interest) மற்றும் வரி விலக்கு பலன்களை இழக்க நேரிடுகிறது.
ஆனால் கடந்த 2026-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி ஒரு ஊழியருக்கு 58 வயது ஆகும் வரை அவரது பிஎப் கணக்கு செயல்படாத கணக்காக கருதப்படாது. குறிப்பாக நீங்கள் வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் 58 வயது வரை பிஎஃப் கணக்கில் வட்டி தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும். மேலும் 58 வயதிற்கு பிறகுதான் வட்டி வரவு வைக்கப்படுவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இல்லாத சமயத்தில் பணத் தேவைக்காக முழு பிஎஃப் தொகையை எடுப்பது உங்களின் எதிர்கால சேமிப்பை குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்க. பிஎப் என்பது ஓய்வுக்காலத்திற்காகச் சத்தமின்றி வளரும் ஒரு நிதியாகும். உங்கள் வயது மற்றும் மெம்பர்ஷிப் அடிப்படையில் வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் இன்றி உங்கள் பணம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நீங்கள் வேலையை மாற்றும்போது பயப்படத் தேவையில்லை. உங்களின் பிஎப் கணக்கை புதிய வேலையுடன் இணைப்பதன் மூலம் அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். இதை உங்கள் UAN (Universal Account Number) மூலம் எளிதாகச் செய்யலாம்.
பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி
சில வாரங்களுக்கு முன்பு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு நிகழ்வில் பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அப்போது பிஎப் அணுகலை எளிதாக்குவதிலும், அதை மிகவும் திறமையாக்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் விளக்கினார். அதபோல் பிஎப் நிதிகள் ஊழியர்களின் தனிப்பட்ட நிதிகள், எனவே அவற்றை எடுப்பதில் இருக்கும் தடைகள் நீக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக அமைச்சர் கூறிய தவலின்படி, PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM-கள் மற்றும் UPI மூலம் பணம் எடுக்கும் முறை மார்ச் 2026 க்கு முன்பு செயல்பாட்டுக்கு வரும் எனவும், இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பொதுவாக பிஎப் நிதியை எடுக்க, கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் கோரிக்கை செயல்படுத்தப்பட்டு, நிதி அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் சரிபார்ப்பு மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த செயல்முறை பெரும்பாலும் தாமதமாகிறது.
மேலும் சில நேரங்களில் சிறிய பிழைகள் காரணமாகக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. தற்போது முன்மொழியப்பட்ட ஏடிஎம் மற்றும் யுபிஐ அடிப்படையிலான அமைப்பு இந்த காத்திருப்பு நேரத்தை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது மக்களுக்கு கணிசமான எளிதாக்கும் தேவைக்கேற்ப நிதியை எடுக்க அனுமதிக்கும்.


Click it and Unblock the Notifications








