கதறும் Cognizant ஊழியர்கள்.. அடுத்த ஆப்பு ரெடி? 3500 பேர் வேலையை காலி செய்த கையோடு உள்ளே வரும் ChatGPT!
சில தினங்களுக்கு முன்பு தான் காக்னிசன்ட் (Cognizant) நிறுவனமானது, தனக்கு ஏற்படும் செலவுகளை குறைப்பதற்காக 3500 ஊழியர்களை பணிநீக்கம் (Layoff) செய்யப்போவதாகவும், ஆபிஸ் ஸ்பேஸை (Office space) குறைக்க போவதாகவும் அறிவித்திருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து காக்னிசன்ட் ஊழியர்கள் மீள்வதற்கு முன் அவர்களது தலையில் இன்னொரு இடி இறக்கபட்டுள்ளது.
திடீர் பணிநீக்கத்தை அறிவித்த கையோடு, காக்னிசன்ட் நிறுவனமானது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ டூல்களில் (Generative AI tools) முதலீடு செய்யப்போவதாக நிறுவனத்தின் சிஇஓ-வான ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர், காக்னிசன்ட் நிறுவனமானது ஜெனெரேட்டிவ் ஏஐ எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை சோதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஜெனரேட்டிவ் ஏஐ டூல்களின் நுழைவானது ஆலோசனை (Consulting), வடிவமைப்பு (Design), பொறியியல் (Engineering) மற்றும் செயல்பாடுகள் (Operations) போன்ற பல்வேறு துறைகளில் உள்ள தங்களது ஊழியர்களின் வேலையை விரைவுபடுத்தும். இதன் மூலம் காக்னிசன்ட் ஊழியர்களின் உற்பத்தித்திறன் (Productivity) இரட்டிப்பாகும் என்று ரவிக்குமார் நம்புகிறார்.
ஆனால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் காட்ஃபாதர் (Godfather of AI) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) ஏஐ-யின் இந்த திடீர் வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என்று எச்சரித்துள்ளார். சமீபத்தில் இவர் கூகுள் (Google) நிறுவனத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் இருந்து விலகியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜெஃப்ரி ஹிண்டனின் கணிப்பை நிஜமாக்குவது போல ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் சிஇஓ-வான அரவிந்த் கிருஷ்ணா (Arvind Krishna), அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளை செய்ய மனிதர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளளார்.
"ஐந்தாண்டு காலத்தில் 30% வேலைகள் ஆனது ஏஐ மற்றும் ஆட்டோமேஷனால் (Automation) மாற்றப்படுவதை என்னால் எளிதாக பார்க்க முடிந்தது. ஐபிஎம்-இல் சுமார் 26,000 தொழிலாளர்கள் உள்ளனர். எனவே வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7,800 வேலைகள் ஏஐ மூலம் ரீப்ளேஸ் (Replace) செய்யப்படலாம்" என்று அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதே ஐபிஎம் நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி) செலவினங்களை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 4,000 தொழிலாளர்களை பணிநீக்கமும் செய்தது. சூழ்நிலைகள் இப்படி இருக்கும் போது ஏஐ டூல்களை பயன்படுத்த போவதாக வெளியாகியுள்ள காக்னிசன்ட்டின் அறிவிப்பானது ஊழியர்களின் வேலையை சுலபமாக்குமா அல்லது இன்னும் பலரது வேலையை பறிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
காக்னிசன்ட் மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவை தத்தம் தலைமேல் தூக்கி வைத்துக்கொள்கின்றன என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அமேசான் (Amazon) உட்பட பல நிறுவனங்களும், மனிதவளத் துறையிலிருக்கும் (HR department) தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ-ஐ பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








