இஸ்ரோவின் புதிய தலைவர்.. மீண்டும் ஒரு தமிழர்.. அரசுப் பள்ளியில் படித்தவர்.. யார் இந்த V நாராயணன்..
இஸ்ரோ (ISRO) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இதுதவிர விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடுகளுக்குச் சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில் வி.நாராயணன் (V Narayanan) என்பவர் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? மற்றும் இவர் குறித்த தகவல்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது இஸ்ரோவின் சாதனைகளைப் பல நாடுகள் வியந்து பார்த்து வருகிறது. குறிப்பாக இஸ்ரோவின் சாதனைகளுக்குத் தமிழர்களின் பங்கு முக்கியமானது. அதாவது அப்துல்கலாம் முதல் பி.வீரமுத்துவேல் வரை என பலரும் சாதித்துள்ளனர். அதுவும் அப்துல் கலாம் அவர்கள் இஸ்ரோவின் தொடக்கக் காலம் முதல் ரோகிணி 2 செயற்கைக்கோள் வெற்றிகரமான ஏவியவர், ராக்கெட்டுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான்-1, மங்கள்யான் செயற்கைக் கோள்களுக்கான திட்ட இயக்குநராகவும் பங்காற்றினார். அதேபோல் ந.வளர்மதி 2011-இன் ஜிசாட்-13 பணியின் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அடுத்து அனைவருக்கும் தெரிந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து இஸ்ரோவின தலைவராக உயர்ந்தவர் கே.சிவன்.
அதேபோல் வனிதா முத்தையா என்பவர் சந்திரயான்-2 பணியின் திட்ட இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நிகர் ஷாஜி சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக இருக்கிறார். அடுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த பி.வீரமுத்துவேல், நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர்.
இந்நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்த இஸ்ரோவின் தலைவராக மீண்டும் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது தற்போது இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஜனவரி 14-ம் தேதி வி.நாராயணன் பொறுப்பேற்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் 40 ஆண்டுகளுக்கும் மேலான விண்வெளித்துறையில் அனுபவம் கொண்டவர், அதேசமயம் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பின்பு இவர் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார் வி.நாராயணன். ஏற்கனவே கன்னியாகுமரியை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக இருந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியின் மேலக்காட்டுவளை என்ற சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் வி.நாராயணன். இவரது அப்பா விவசாயத்தோடு ஊருக்குள்ளேயே சிறுதொழில்கள் சிலவற்றையும் செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர் தான் நாராயணன். குடும்ப கஷ்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆசியர்களின் உதவியோடும் அவர்களின் ஆசிர்வாதத்தோடும்தான் கடினமாகப் படித்து இந்த நிலையை எட்டியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் வி.நாராயணன். மேலும் வி.நாராயணன் தலைமையில் இஸ்ரோ இன்னும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








