ஆதார் கார்டில் இனி பெயர், முகவரி, பயோமெட்ரிக் அப்டேட் செய்ய எவ்வளவு செலவாகும்? இதோ முழு விவரம்..
ஆதார் அட்டையில் இனி திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஆதார் ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக இந்த திருத்தப்பட்ட கட்டண அமைப்பு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதேபோல் இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 30, 2028 வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது உங்கள் ஆதார் கார்டை ஆதார் மையங்களில் அப்டேட் செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆதார் அப்டேட் புதிய கட்டணம்
ஆதார் மையங்களில் பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் போன்ற விவரங்களை மாற்றுவதற்கான கட்டணம், முன்னர் இருந்த ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2028 முதல் இந்த கட்டணம் 90 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் அப்டேட் புதிய கட்டணம்
கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் போமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் அடையாள சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்களை ஆதார் மையங்களில் புதுப்பிப்பதற்கான கட்டணமும் ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர e-KYC அல்லது பிற வழிகளில் ஆதார் பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான கட்டணம் ரூ. 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இரண்டாவது கட்டத்தில் ரூ.50-ஆக உயரும் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு இலவசம்
0 முதல் 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முதல் முறையாக ஆதார் பதிவு செய்வதற்கு கட்டணம் கிடையாது. மேலும் 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயதில் செய்யும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுகளும் இலவசமாகச் செய்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அக்டோபர் 2025 முதல் ஆதார் மையத்திற்கு வர இயலாதவர்களுக்காக, வீட்டிற்கே வந்து ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தல் செய்யும் சேவைக்கு ஜிஎஸ்டி உட்பட ரூ.700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பதிவு செய்யும்போது முதல் நபருக்கு 700 ரூபாயும், அதன்பிறகு பதிவு செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 350 ரூபாயும் வசூலிக்கப்படும்.
ஐஆர்சிடிசி புதிய விதிகள்
மேலும் சமீபத்தில் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் (Aadhaar) கட்டாயம் என, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் டிக்கெட்டுகளை முன்பு செய்ய முடியும். குறிப்பாக ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கும் இடைத்தரகர்களைத் தடுக்கும் வகையில் இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுகிறது.
ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே முதல் 15 நிமிடங்களுக்கு பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக முன்பதிவு காலை 10 மணிக்கு திறந்தால், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டும் காலை 10 மணி முதல் காலை 10.15 மணி வரை முன்பதிவு செய்ய முடியும். அந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு IRCTC கணக்கு உள்ள எவரும் வழக்கம் போல் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








