இனி ரூ.125 கட்டணம்.. Aadhaar அட்டையில் மாற்றங்கள் செய்யும் கட்டணம் அதிகரிப்பு.. UIDAI இறக்கிய இடி!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்வதாக அறிவித்து உள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் அக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கூடவே யுஐடிஏஐ ஆனது அடுத்த சுழற்சிக்கு, அதாவது அக்டோபர் 1, 2028 முதல் செப்டம்பர் 30, 2031 வரை பொருந்தக்கூடிய கட்டணங்களையும் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்களின்படி முன்னதாக ரூ.50 விலையுள்ளதாக இருந்த ஆதார் சேவைகள் தற்போது ரூ.75 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ரூ.100 விலையுள்ள ஆகார் சேவைகளுக்கு இனி ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படும்.

பின்னர் அக்டோபர் 1, 2028 முதல் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில் - அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.75 என்கிற கட்டணம் வசூலிக்கபட உள்ள சேவைகளுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் ரூ.125 செலுத்திய பிறகு கிடைக்கும் சேவைகள் ரூ.150 ஆக விலை உயர்த்தப்படும்.
என்னென்ன ஆதார் சேவைகள் ரூ.50 இல் இருந்து ரூ.75 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன? கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க விரும்பினால், 5 முதல் 7 வயது வரை ஒரு முறை செய்தால், அது இலவசம்!
அதேபோல், 15 முதல் 17 வயது வரையிலான டீனேஜர் ஒரு முறை புதுப்பித்தால், அதுவும் இலவசம். மற்ற எல்லா நிகழ்வுகளிலும், ரூ.125 கட்டணம் பொருந்தும். இருப்பினும், சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், 7 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செப்டம்பர் 30, 2026 வரை இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 29, 2025 தேதியிட்ட யுஐடிஏஐ அலுவலக குறிப்பாணையில் "கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) சேவை 5-7 வயது மற்றும் 15-17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம். மிஷன் முறையில் எம்பியு நிலுவையில் உள்ளதைக் குறைக்க, 7-15 வயதுக்குட்பட்டவர்களில் எம்பியு-ஐ ஐ மேற்கொள்வதற்காக ஆதார் எண் வைத்திருப்பவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணங்களை செப்டம்பர் 30, 2026 வரை ஒரு வருட காலத்திற்கு தள்ளுபடி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.50 இல் இருந்து ரூ.75 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ள மக்கள்தொகை புதுப்பிப்பு கட்டணங்கள்: இந்த வகையான புதுப்பிப்பு ஆனது - பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி அல்லது அதன் எந்தவொரு கலவையையும் பதிவு செய்வதற்காக செய்யப்படுகிறது.
புதிய திருத்தப்பட்ட கட்டணங்களின் கீழ், பயோமெட்ரிக் புதுப்பிப்புடன் ஒரே நேரத்தில் (மேற்கண்ட அப்டேட்களை) செய்தால், அது இலவசமாக செய்யப்படும். இருப்பினும், இது தனித்தனியாக செய்யப்பட்டால், முன்னதாக வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணத்தில் இருந்து ரூ.75 என்கிற விலை உயர்த்தப்பட்ட / புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆவண புதுப்பிப்பு கட்டணங்கள்: ஆவண புதுப்பிப்பு ஆனது - பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஆதரவாக அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக ஆவணங்களை சமர்ப்பிப்பதை குறிக்கிறது. நீங்கள் மைஆதார் (myAadhaar) போர்டல் மூலம் இதைச் செய்தால், இந்த சேவை ஜூன் 14, 2026 அன்று வரை இலவசமாக இருக்கும்
இருப்பினும், ஆதார் பதிவு மையத்தில் இந்த புதுப்பிப்பு செய்யப்பட்டால், ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும், இது முந்தைய ரூ.50 கட்டணத்திலிருந்து ரூ.25 அதிகரிக்கப்பட்ட கட்டணம் ஆகும். கடைசியாக வீட்டுப் பதிவு சேவைகளை பெறுவதற்கான கட்டணம் ரூ.700 (ஜிஎஸ்டி உட்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை - மக்கள்தொகை அல்லது பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு பொருந்தும் வழக்கமான கட்டணங்களுடன் கூடுதலாகும். ஒரே முகவரியில் (ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பல குடியிருப்பாளர்கள் இந்த சேவையை தேர்வுசெய்தால், முதல் குடியிருப்பாளருக்கு ரூ.700 சேவைக் கட்டணம் விதிக்கப்படும், அதே நேரத்தில் ஒவ்வொரு கூடுதல் குடியிருப்பாளருக்கும் ரூ.350 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








