ஆதார் அட்டையை திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்கிறதா? பொதுமக்கள் கலக்கம்.. வெளியானது முக்கியத் தகவல்..
நாட்டில் அனைத்து முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் (Aadhaar) தேவைப்படுகிறது. அதுவும் வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு, எல்பிஜி சிலிண்டருக்கான மானியம், ஸ்காலர்ஷிப் என பல்வேறு நலத்திட்டங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஆதார் (Aadhaar) கார்டை முகவரி சான்றாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்நிலையில் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணம் உயரப் போவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒருவேளை ஆதார் திருத்தம் செய்ய கட்டணம் உயர்ந்தால் அது பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும்.

அக்டோபர் 1-ம் தேதி முதல்?
அதாவது ஆதார் கார்டு சேவைகளுக்கான கட்டணம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயரும் என அதிகாரி ஒரு தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த கட்டண உயர்வு சிறிய அளவில் மட்டுமே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆதார் கார்டு சேவைக் கட்டண உயர்வு குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆதார் கார்டில் முகவரி மாற்றம், மொபைல் எண்ணைச் சேர்த்தல் மற்றும் பிறந்த தேதியை மாற்றுதல் போன்ற சேவைகளுக்கு தற்போது ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டணம் 100 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புகைப்படம் மற்றும் மற்றும் பிற புதுப்பிப்பு சேவைகளுக்கு 100 ரூபாயில் இருந்து 125 ரூபாயாக கட்டணம் உயரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அஞ்சல் அலுவலகம், அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்கள், வங்கிகள் போன்ற இடங்களில் தான் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி உள்ளது.
பொதுமக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் ஆதார் திருத்தக் கட்டணம் உயர்ந்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஏற்கனவே ஆதார் திருத்தங்கள் சரியான முறையில் நடைபெறவில்லை என பொது மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன்படி ஆதார் திருத்தங்களுக்கு விண்ணப்பித்த பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் சரியாக இல்லை என்று கூறி ஆதார் ஆணையம் ரத்து செய்து விடுகிறது.
இந்நிலையில் ஆதார் சேவைக் கட்டண உயர்வு பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சிலர் ஆதார் சேவை கட்டணத்தை உயர்த்தினாலும் பரவாயில்லை, ஆனால் ஆதார் திருத்த நடவடிக்கைகள் ஆதார் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இ-ஆதார் செயலி
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஆதார் (E-Aadhaar) என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல் தங்கள் ஸ்மார்ட்போனிலேயே ஆதார் சேவைகளைப் பெற முடியும்.

இ-ஆதார் செயலி இந்த 2025 ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இ-ஆதார் செயலி ஆனது ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவமாகச் செயல்படும். இதன் மூலம், உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றலாம். மேலும், தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் பகிரவும் முடியும்.
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இ-ஆதார் செயலி மூலம் எந்தவொரு அப்டேட்டும் உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். அதாவது இதில் பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் போன்ற தகவலை மாற்றலாம். சிங்கிள் டிஜிட்டல் இன்டர்பேஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இ-ஆதார் மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








