ஆதார் அட்டை பாதுகாப்பாக உள்ளது, தகவல்கள் கசிய வாய்ப்பில்லை: யூஐடிஏஐ உறுதி
யூஐடிஏஐ ரகசியமாக வைத்துள்ள எல்லா ஆதார் அட்டை தகவல்களையும் வெறும் ரூ.500க்கு ஒரு வாட்ஸ்அப் குழுவில் விற்கப்படுவதாக, நேற்று தகவல்கள் வெளியாகின. மேலும் ரூ.300 கூடுதலாக கட்டணம் தெலுத்தினால், ஆதார் அட்டை தகவல்கள் அனைத்தையும் அச்சிட்டு அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ), ஆதார் அட்டை தகவல்கள் கசிந்துள்ளதை குறித்த செய்தியை மறுத்துள்ளது. ட்ரைபூனில் வந்த இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ள அந்த ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயோமெட்ரிக் தகவல் உட்பட ஆதார் அட்டையின் எல்லா தகவல்களும் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஆதாரின் அனைத்து தகவல்களும் வலுவான ஒப்பற்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "எந்த ஆதார் அட்டை தகவலும் கசிந்து வெளியாகவில்லை என்பதற்கு யூஐடிஏஐ உறுதி அளிக்கிறது" என்று கூறியுள்ளது.
குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நியமிக்கபட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு, தேடலுக்கான வசதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி குடிமக்களுக்கு உதவ முடியும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "குறைத் தீர்ப்பிற்கான தேடல் வசதியை தவறான முறையில் பயன்படுத்தி, செய்திகளில் வெளியானது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆதார் அட்டையின் முழு உரிமையும் கொண்டுள்ள யூஐடிஏஐ-யிடம் இந்தப் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறியும் வசதி உள்ளது. எனவே மேற்கூறிய சம்பவத்தோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது உட்பட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
உயர்தர குறியாக்க அடிப்படையில் ஆதார் அட்டையின் தகவல்கள் அனைத்தும் யூஐடிஏஐ-யிடம் பாதுகாப்பாக உள்ளது. மேலும் மக்களின் பயோமெட்ரிக்ஸ் அளவீடுகள் இல்லாமல், வெளிப்படையான சில தகவல்களை வைத்து கொண்டு தவறான முறையில் பயன்படுத்த முடியாது.
இது குறித்து அரசு தரப்பினர் கூறுகையில், ஆதார் அட்டையின் 12 இலக்க எண் ரகசியமானது அல்ல என்பதோடு, அரசு நலத்திட்டங்கள் அல்லது குறிப்பிட்ட சேவைகளை பெற விரும்பும் ஆதார் அட்டையின் உரிமையாளர் அதிகாரபூர்வமான முகவர்களிடம், அது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டை எண்ணை சரியான முறையில் பயன்படுத்தினால், அதன்மூலம் பாதுகாப்பு அல்லது நிதி தொடர்பான அச்சுறுத்தல் எதுவும் ஏற்படாது என்று கூற முடியாது. அதே நேரத்தில் வெறும் ஆதார் அட்டையின் எண்ணை மட்டும் பயன்படுத்துவதால், பாதுகாப்பு மற்றும் எந்த நிதி தொடர்பான அல்லது மற்ற மோசடிகளுக்கும் வழிவகுக்காது. ஏனெனில் குறிப்பிட்ட நபரின் அதிகாரபூர்வமான கைரேகை அல்லது கண் விழிபடலம் இருந்தால் மட்டுமே செயல்பாடு முழுமை அடையும்.
மேலும் அந்த அறிக்கையில், "எனவே ஆதார் அட்டை சேர்ப்பு தகவல்களைக் குறுக்குவழியில் பெறுவது அல்லது நகலெடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். யூஐடிஏஐ தகவல் மையங்களின் கட்டுமான அமைப்பிற்கு, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பாதுகாப்பிற்கான சிறந்த தரம் மற்றும் சட்டப்பூர்வமான விதிமுறைகள் தகுந்த முறையில் பின்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ட்ரைபூன் ரிப்போர்ட் செய்தித்தாளில் வெளியான செய்தியில், யூஐடிஏஐ-யிடம் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டுள்ள ஒரு தனி நபர் தொடர்பான பெயர், முகவரி, அஞ்சல் குறியீடு (பின்), புகைப்படம், ஃபோன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட முகவர் மூலம் ரூ.500க்கு 10 நிமிடத்தில் பெற்று கொள்ள முடியும் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
மேற்கூறிய தகவல்களைப் பெற செலுத்தப்பட்ட ரூ.500 உடன் மேலும் ரூ.300 செலுத்தப்பட்டால், குறிப்பிட்ட முகவர் மூலம் எந்தொரு நபரின் ஆதார் அட்டை எண்ணை அளித்தாலும், ஆதார் அட்டையை அச்சிட்டு அளிக்கக் கூடிய மென்பொருள் இருப்பதாக, அந்த செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அந்தச் செய்தியில், இது குறித்து ட்ரைபூன் ரிப்போர்ட் விசாரித்த போது, சுமார் 6 மாதங்களாக ஒரு மோசடி கும்பல் இதன் பின்னால் செயல்பட்டதாகவும், இதற்காக வாட்ஸ்அப்பில் அடையாளம் தெரியாத ஒரு குழு உருவாக்கப்பட்டதாகவும், செய்தியில் தெரிவித்திருந்தது.
நாடெங்கிலும் பொது சேவை மையங்கள் திட்டத்தின் (சிஎஸ்சிஎஸ்) கீழ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 3 லட்சத்திற்கும் அதிகமான கிராம நிலை நிறுவன இயக்குநர்களுக்கு, யூஐடிஏஐ தகவல்களைப் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய குழுவினர் இவர்களை இலக்காக வைத்து செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிஎஸ்சிஎஸ் இயக்குநர்களுக்கு நாடெங்கிலும் ஆதார் அட்டைகளை அமைக்கும் பணி துவக்கத்தில் அளிக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. பாதுகாப்பு பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மேற்கண்ட சேவையை தபால் நிலையங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட வங்கிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications