ஜூலை 1 முதல் எல்லாமே மாறுது.. தட்கல் ரயில் டிக்கெட்.. இனி ஆதார் அவசியம்.. இதோ முழு விவரம்..
இந்திய ரயில்வே (Indian Railways) அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறைகளைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் முறையில் டிக்கெட் (Tatkal Ticket) புக்கிங் செய்வதற்கு ஆதார் கார்டு (aadhaar card) அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது தினமும் பல லட்சம் மக்கள் இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதுவும் ரயில் பயணம் செய்வது மிக எளிதாக இருக்கும் அதேசமயம் ரயிலில் டிக்கெட் விலை குறைவு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம். இதுதவிர ரயில்களில் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.

அதேசமயம் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் எடுக்க நிறைய வழிகளைக் கொடுத்துள்ளது இந்திய ரயில்வே அமைப்பு. அதாவது ரயில் நிலையங்களில் நேரடியாகச் சென்று டிக்கெட் எடுக்கலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். அதற்கு பெரும்பாலான பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) வெப்சைட் அல்லது செயலியைப் பயன்படுத்த முடியும்.
ஆனால் ரயில்களில் டிக்கெட் எளிதாகக் கிடைப்பதில்லை. நாம் பயணம் செய்ய வேண்டிய நாளுக்கு நில வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால்தான் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும். பேருந்துகளில் இருப்பதைப் போன்று உடனே சீட் கிடைக்காது. காரணம் என்னவென்றால் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதால் டிக்கெட் கிடைப்பது அரிதான விஷயம் என்றே கூறலாம்.
அதேசமயம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பலர் தட்கல் முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் என்பது நாம் நாளை பயணம் செய்ய முடிவு செய்தால் இன்று முன்பதிவு செய்யும் ஒரு முறையாகும். அதாவது ஒரு நாளுக்கு முன்பு முன்பதிவு செய்யும் ஒரு முறையாகும். திடீரென முடிவெடுத்து பயணம் செய்பவர்கள் இந்த முறையைத் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த தட்கல் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கும்.
அதேபோல் இந்த தட்கல் டிக்கெட்டை நாம் அனைத்து நேரங்களிலும் முன்பதிவு செய்துவிட முடியாது. இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. நீங்கள் நாளை இரவு ரயில் பயணம் செய்ய வேண்டியிருந்தால் இன்று காலையே தட்கல் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் நேரம் ஒரு நாளுக்கு முன்பாகவே திறக்கிறது. அதாவது ஏசி பெட்டியில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்ய காலை 11 மணிக்கும் புக்கிங் வசதி திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக புக்கிங் தொடங்கிய இரண்டு மூன்று நிமிடங்களில் சீட் காலியாகிவிடும். டிக்கெட் கிடைக்காமல் போய்விடும். எனவே இதிலும் சீட் கிடைப்பது சற்று சிரமம் தான். டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கும் அனைவருக்கும் கிடைத்துவிடாது. அதாவது காத்திருப்பு டிக்கெட் வந்துவிடும். அது உறுதியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். ரயில் கிளம்புவதற்கான சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் உங்களது சீட் உறுதிசெய்யப்படாவிட்டால் டிக்கெட் ரத்தாகி ரீஃபணட் பணம் உங்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.
இந்நிலையில் தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி இந்த விதிமுறையைப் பின்பற்றினால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

ரயில்வே அமைப்பு இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. தகுதியான பயனாளிகள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய ரயில்வே ஆதார் ஓடிபி சரிபார்ப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15-ம் தேதி முதல் ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டால் மட்டுமே சரிபார்ப்பு செயல்முறை நிறைவடையும். அதன் பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலையங்களில் உள்ள கணினி டிக்கெட் புக்கிங் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட்களுக்கும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








