Aadhaar அட்டை அடிப்படையிலான பிறந்த தேதி, வயது.. உச்சநீதி மன்றம் முக்கிய உத்தரவு!
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் வயதை நிர்ணயம் செய்ய ஆதார் அட்டையை (Aadhaar Card) ஏற்றுக்கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் (Punjab and Haryana High Court) உத்தரவை உச்ச நீதிமன்றம் (Supreme Court) ரத்து செய்து உள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டையும் (Compensation) உறுதி செய்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வானது, சிறார் நீதி சட்டம் (அதாவது குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்), 2015 இன் பிரிவு 94 இன் கீழ், பள்ளி விடுப்பு சான்றிதழில் (School leaving certificate) குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியில் (Date of birth) இருந்தே இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ரோஹ்தக்கில் உள்ள எம்ஏசிடி (MACT - Motor Accident Claims Tribunal) ஆனது இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது, இறந்தவரின் வயதை அவரது ஆதார் அட்டையை வைத்து தவறாக குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக இறந்தவருக்கான இழப்பீட்டு தொகையானது ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்துள்ளது.
ஆனால் அவரது பள்ளி விடுப்புச் சான்றிதழின்படி கணக்கிடப்பட்டால், இறப்பின் போது அவருடைய வயது 45 ஆக இருந்தது. ஆதார் அட்டையின் அடிப்படையில் இறந்தவரின் வயதை நிர்ணயிப்பதில் தவறு செய்ததாக குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். உயர் நீதிமன்றமும் இறந்தவரின் ஆதார் அட்டையை நம்பி அவரது வயதை 47 ஆக கணக்கிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கிற்கான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அதில் மேல்முறையீடு செய்தவர்களின் வாதத்தை ஏற்று, வயதை நிர்ணயம் செய்யும் போது இறந்தவரின் பள்ளி விடுப்பு சான்றிதழின் அடிப்படையில் தான் இறந்தவரின் வயது கணக்கிடப்பட வேண்டும். ஆதார் அட்டையை வைத்து ஒருவருடைய பிறந்த தேதி / வயதை கணக்கிட கூடாது; ஆதார் அட்டை அதற்கான ஆவணம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுகுறித்த தீர்ப்பின் போது.. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India), 2023 ஆம் ஆண்டின் 8 ஆம் ஆண்டின் சுற்றறிக்கையின் மூலம், டிசம்பர் 20, 2018 தேதியிட்ட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையில், ஆதார் அட்டை ஆனது அடையாளத்தை நிறுவ பயன்படுத்த முடியும், ஆனால் அது பிறந்த தேதிக்கான ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








