யப்பா சாமி, யாருய்யா நீ? இனி 9 நாட்கள் ரீசார்ஜ் பிரேக்.. சம்பளம் வந்துரும்.. டெக் நிறுவனத்தின் புதிய பாலிசி!
நீங்கள் அலுவலகம் சென்று பணிபுரிபவராக இருந்தால், வாரம் முழுக்க அயராது வேலை செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ரெஸ்ட் எடுக்க முடியாமல், மறுநாள் சோர்வுடன் வேண்டா வெறுப்பாக அலுவலகம் செல்லும் கஷ்டம் தெரிந்திருக்கும். அதுவே உங்களுக்கு மாதத்தில் 9 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டால் எப்படி இருக்கும்?
இப்போதைய டெக் பணி சூழலே வேறுவிதமாக இருக்கிறது. பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது வேலை அடுத்த நாள் இருக்குமா? இருக்காதா? என்பது கூட தெரியாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். தேவையில்லாதபட்சத்தில் ஒரே நாளில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். மாதம் மாதம் சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களும், அதற்கேற்ப ஊழியர்கள் மிகவும் திறமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.

இருப்பினும், அதே நிறுவனங்கள்தான், ஊழியர்களின் மனநிலை, பொருளாதார நிலைக்கு ஏற்ப பல்வேறு சலுகைகளையும், சம்பள உயர்வையும் கொடுத்து வருகிறது. அதில், சில நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை அறிந்தால், அங்கு "நமக்கு ஒரு வேலை கிடைக்காதா?" என்றே நினைக்க வைக்கும். அந்த வகையில் ஒரு டெக் நிறுவனம், ஊழியர்களுக்கு ரீசார்ஜ் பிரேக் (Recharge Break) என்ற பெயரில் 9 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை (9 days Paid Leave) வழங்கிவருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹேக்கர்ரேன்க் (HackerRank) என்னும் டெக் நிறுவனத்தில், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவொரு பணியமர்த்தல் நிறுவனமாகும். திறமையான டெக் ஊழியர்களை தேர்வு செய்து, நிறுவனங்களுக்கு அடையாளம் காட்டும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனமே ரீசார்ஜ் பிரேக் என்னும் புதிய பெய்ட் லீவ் பாலிசியை கொண்டு வந்துள்ளது.
இந்த ரீசார்ஜ் பிரேக் பாலிசி மூலம், மாதத்தின் முதல் 9 நாட்கள் ஊழியர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இந்த 9 நாட்களுக்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிடும். இந்த நாட்களில் அவர்களுக்கு அலுவலக பணி தொடர்பாக வரும், இமெயில், கால்களுக்கு கூட அவர்கள் பதிலளிக்க வேண்டியது கிடையாது. பத்தாவது நாளில் அதற்கு பதிலளித்தால் மட்டுமே போதும்.
இந்த பாலிசி ஜூலை மாதத்தில் இருந்து அந்த நிறுவனத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த வகையில், ஜூலை 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் விடுமுறையில் இருப்பார்கள். இதுகுறித்து அந்த நிறுவனம் தரப்பில், "ஊழியர்கள் மத்தியில் எல்லா வாரமும் சமநிலையான அவுட்புட் எதிர்பார்க்க முடிவதில்லை.
சில நேரங்களில் அதிகப்படியான விடுமுறை எடுக்கும் பழக்கமும் அவர்களிடம் இருக்கிறது. இதனை ஒரே பாலிசி மூலம் சரி செய்யவே, ஊழியர்களுக்கு விடுப்பும் கொடுத்து, சம்பளமும் வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு வேலையை சிறப்பாக தொடங்குவதற்கான வாய்ப்பாக இருக்கும். விடுமுறை எடுக்கும் பழக்கத்தையும் குறைக்கும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் நன்மை கிடைக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த பாலிசியை தங்களது நிறுவனங்களிலும் கொண்டுவந்தால் நன்றாக இருக்குமே என்று மற்ற டெக் ஊழியர்களும் நினைப்பது தெரிகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








