பேங்க் பாஸ்வேர்டை மாற்றிய 10 வயது சிறுமி.. ரூ.2.4 லட்சம் மாயம்.. விசாரணையில் வெளியான உண்மை?
பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகள் ஸ்மார்ட்போன்களில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க தவறினால், என்ன நடக்கும் என்பதை 10 வயது சிறுமியின் செயல் நமக்கு காட்டியிருக்கிறது. வங்கியின் பாஸ்வேர்டை மாற்றி பணம் எடுக்கப்படும் வரையில் அந்த சிறுமியின் தாயாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்களை (Smartphones) தவிர்த்துவிட்டு, அன்றாட வாழ்க்கை நகர்வது கிடையாது. முன்பெல்லாம் பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன்களை, இப்போது 5 வயது குழந்தைகளே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். பெற்றோர்களும் அதில் கவனமுடன் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால், பெற்றோர்களே தங்களது அறியாமை காரணமாக குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர்.

எங்களது குழந்தை வீடியோ பார்த்தால் மட்டுமே சாப்பிடுகிறது, கேம் விளையாடினால் மட்டுமே தூங்குகிறது என்று ஸ்மார்ட்போன்களை தெரிந்தே அவர்களிடம் கொடுக்கின்றனர். இதுவே ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லையென்றால், சில பெற்றோர்கள் தங்களது கண்பார்வையில் இல்லாதபோதும், குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுத்து பயன்படுத்த அனுமதிப்பதை என்ன சொல்வது.
பொதுவாக ஸ்மார்ட்போன் பயன்படுத்த வயது வரம்பு உள்ளது. குறைந்தபட்சம் 10 வயது கடந்த சிறுவர், சிறுமிகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கலாம். அதற்கு முன்பாக ஸ்மார்ட்போனை கொடுத்தால், பல்வேறு பாதிப்புகளுக்கு பெற்றோர்களும், குழந்தைகளும் ஆளாக நேரிட வாய்ப்புள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக பிரிட்டனில் 10 வயது சிறுமியின் செயல் காட்டியிருக்கிறது.
வேல்ஸ் நாட்டின் டென்பிக்ஷயர் பகுதியை சேர்ந்த ஜார்ஜினா என்னும் பெண் அதே பகுதியில் நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். இவரது 10 வயது மகள் ஸ்மார்ட்போன் மீது அதீத ஆர்வம் கொண்டவர். ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கவில்லையென்றால், சாப்பிட மறுப்பது, பள்ளிக்கு செல்ல மறுப்பது போன்ற செயல்களை அந்த சிறுமி செய்துவந்துள்ளார்.
இதனால் ஜார்ஜினா, ஆப்பிள் ஐபாட் (iPod) ஒன்றை வாங்கி, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மகள் பயன்படுத்திக்கொள்ள கொடுத்துள்ளார். இந்த ஐபாடில் அந்த சிறுமி ரோப்லாக்ஸ் (Roblox) என்னும் ஆன்லைன் கேம்மை அடிக்கடி விளையாடி வந்துள்ளார். இந்த நேரத்தில் கடந்த ஒரு வாரமாக ஜார்ஜினாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.4 லட்சம் பணம் டெபிட் ஆகியுள்ளது.
தனது வங்கி பாஸ்வோர்ட் யாருக்கும் தெரியாத நிலையில், எப்படி பணம் பறிபோனது என்று குழப்பமடைந்த ஜார்ஜினா, நேரடியாக வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளார். அப்போது வங்கி தரப்பில், ரோப்லாக்ஸ் கேம் விளையாடுவதற்காக அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஜார்ஜினா, வீட்டிற்கு சென்று, தனது மகளிடம் விசாரிக்கையில், உண்மை தெரியவந்தது.
அந்த சிறுமியே ரோப்லாக்ஸ் கேம் விளையாடுவதற்காக தாயின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை செலவழித்ததும், அதோடு தனது தாய்க்கே தெரியாத வகையில் வங்கி பாஸ்வேர்ட்டை மாற்றி அதை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜினா, ரோப்லாக்ஸ் நிறுவனத்திடமும், வங்கியிடமும் முறையிட்டு பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், வங்கி ஊழியர்கள் தர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து ஜார்ஜினா, போலீசாரிடமும், செய்தி நிறுவனங்களிடமும் முறையிட்டு, தனது வாழ்வாதரமே அந்த பணத்தை நம்பிதான் இருக்கிறது. அது இல்லையென்றால் சாப்பாட்டுக்கூட வழியில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் செய்திகள் வெளியாகவே, அந்த வங்கி தரப்பில், பணத்தை திருப்பிக்கொடுக்க ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே, பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுக்கும்போது, கவனமுடன் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








