LinkedIn ஷாக் ரிப்போர்ட்! 88% இந்திய இளைஞர்கள் தானாக வேலையை விட்டு விலக தயார்! அசர வைக்கும் காரணம்.!
18 முதல் 24 வயதுடைய இளம் இந்தியர்களில் 88 சதவீதம் பேர் வேலை மாற்றத்திற்கு தயாராக இருப்பதாக LinkedIn ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல வேலை வாய்ப்பு வழங்கல் தளமாக இருக்கும் LinkedIn வெளியிட்ட ஆய்வறிக்கை சமீபத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. வேலை மாற்றம் குறித்து மட்டுமல்ல LinkedIn அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குதிரை கொம்பாக இருக்கும் வேலை வாய்ப்பு
வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக மாறி வருகிறது. அனுபவமும் திறமையும் இருந்தால் போதும் வேறு வேலைக்கு சென்றுவிடலாம் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. குறிப்பாக கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு.
தற்போதைய காலக்கட்டத்தை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். உச்ச நிறுவனத்தில் உச்ச பதவியில் இருந்தவர்கள் கூட தற்போது வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இளங்கன்று பயமறியாது
குறிப்பாக உலகளவில் பல்வேறு நிறுவனங்களும் பணியாளர்களை layoff செய்து வருகிறது. நிறுவனங்கள் ஊழியர்களை கொத்தாக கொத்தாக வேலையை விட்டு நீக்கி வருகிறது.
இந்த நிலையில் LinkedIn வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஆனது வியப்படைய வைக்கும் வகையில் இருக்கிறது. இந்த அறிக்கையை பார்க்கும் போது என்ன நடந்தாலும் சரி, எங்கள் குறிக்கோளை அடைவோம் என இளைஞர்கள் விழிப்போடு இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் "இளங்கன்று பயமறியாது" என கூறலாம். அறிக்கை தகவலை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை
லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையை பார்க்கலாம். அதில், 88 சதவீத இளம் பணியாளர்கள் இந்த ஆண்டு தங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2022 டிசம்பரில் இந்தியாவில் பணியமர்த்தல் அளவு 23 சதவீதம் குறைந்திருக்கிறது.
5 இல் 4 பேர் அதாவது 80 சதவீதம் பேர் தங்கள் வேலை மாற்றத்தை கருத்தில் கொண்டுள்ளனர். மறுபுறம் 45 முதல் 54 வயதுக்குட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் வேலை மாற விரும்புகின்றனர் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உழைப்பில் நம்பிக்கை
தற்போதைய பொருளாதார நிலைமைகளை கண்டு பயப்படாமல் உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் திறன்களை மேம்படுத்த புதிய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி 78 சதவீதம் பேர் வேலையை விட்டு வெளியேறினால் பிற வேலையை கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆய்வுத் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பணியாளர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் அவர்கள் திறன்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரியான முறையில் நடவடிக்கை எடுக்கும் இளைஞர்கள்
அதேபோல் இந்த அறிக்கையில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 54 சதவீதம் பேர் தங்கள் தொழில் சார்ந்த சரியான நபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தும், தொழில் தொடர்பான வணிக நிகழ்வுகளில் கலந்து கொண்டும் தங்களது நெட்வொர்க்கை வளர்த்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் செலவுகள்
பணியாளர் வேலை மாற விரும்புவதற்கான காரணம் குறித்து பார்க்கையில், வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதாலும், நிதி தேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் 35 சதவீதம் பேர் வேலை மாற விரும்புகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறமையில் நம்பிக்கை
அதேபோல் 33 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையிலான சிறந்த வேலைக்கு மாற விரும்புகிறார்கள். மேலும் 32 சதவீதம் பேர் தங்கள் திறமையில் நம்பிக்கையுடன் இருப்பதால் சிறந்த வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையில் வேலை மாற்றத்திற்கு விரும்புகிறார்கள்.

வளரவும் முன்னேறவும் நடவடிக்கை
LinkedIn தொழில் நிபுணரும், LinkedIn இந்தியாவின் தலையங்கத்தின் தலைவருமான நிரஜிதா பானர்ஜி இதுகுறித்து கூறுகையில்., கடினமான பொருளாதார நிலைமைகளை சந்திக்கும் நேரத்திலும், இந்திய பணியாளர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்பி வளரவும் முன்னேறவும் உள்ளனர். அவர்கள், தங்கள் உழைப்புக்கேற்ற சரியான ஊதியத்தை வழங்கும் நிறுவனத்துக்கும், பதவிக்கும் பாடுபடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








