Anti-India கருத்துகள் போடும் YouTube சேனல்கள்: மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
தடை செய்யப்பட்ட சேனல்கள் அனைத்தும் பார்வையாளர்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்தி தொகுப்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் டிவி சேனல் லோகோக்களை பயன்படுத்தி போலியாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
இந்தியாவுக்கு எதிரான போலியான உள்ளடக்கம் தொடர்பாக 8 யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு சேனலும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 102 யூடியூப் சேனல்கள் உட்பட பல சமூகவலைதள கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஐடி விதிகள் 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, போலி மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்ட 1 பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல போலி தகவல்கள் பரப்பிய யூடியூப் சேனல்கள்
இந்த 8 யூடியூப் சேனல்களும் ஏறக்குறைய, 86 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 114 கோடி பார்வையாளர்களை கொண்டிருக்கிறது.
"இந்தியாவில் உள்ள மத சமூகங்களிடையே வெறுப்பை பரப்புகின்றன... (தவறான கூற்றுகளுடன்)" என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, "இந்திய அரசு மதக் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது... மதப் பண்டிகைகளைக் கொண்டாடத் தடை விதித்தது, இந்தியாவில் மதப் போர்ப் பிரகடனம்" என பல போலி தகவல்கள் இந்த யூடியூப் சேனல்கள் மூலம் பரப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள்
பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவதற்கு என சில செய்தி சேனல்களின் லோகோக்கள் மற்றும் தொகுப்பாளர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலியான தகவலை, தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த யூடியூப் சேனல்கள் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் போலி செய்திகளை பரப்பியுள்ளது.

8 சேனல்களும் மொத்தமாக 114 கோடி பார்வையாளர்களையும், 85.73 லட்ச சந்தாதாரர்களையும் கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்களில் ‘சப் குச் தேகோ' அதிக சந்தாதாரர்களை கொண்டிருந்தது.
இந்த யூடியூப் சேனல் மட்டும் 19.4 லட்ச சந்தாதாரர்கள் மற்றும் 33 கோடி பார்வையாளர்களை கொண்டிருந்தது. 1 பேஸ்புக் கணக்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அதேபோல் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ‘நியூஸ் கி துன்யா' என்ற யூடியூப் சேனலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 1 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
இந்த யூடியூப் சேனல் இந்தியாவின் தேசப் பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால், அதன் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள்
அதேபோல் முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக தடை செய்யப்பட்டது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் பீதியை உருவாக்கவும், வகுப்புவாத ஒற்றுமையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புகின்றன என தெரிவிக்கப்பட்டது.
தடுக்கப்பட்ட யூடியூப் சேனல்களில் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு சேனல்களும், இந்தியாவைச் சேர்ந்த 10 யூடியூப் சேனல்களும் அடங்கும். இவை 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தன.

இந்தியாவைத் தளமாகக் கொண்ட சில யூடியூப் சேனல்களில் ஒரு சமூகத்தை பயங்கரவாதிகள் என குறிப்பிடுவதாகவும், இது குறிப்பிட்ட மத சமூகங்களை சேர்ந்தவர்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.
அதேபோல் இதுபோன்ற உள்ளடக்கம் ஆனது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டது என அமைச்சகம் குறிப்பிட்டது.

அதேபோல் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் சேனல்களானது, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் இந்தியா குறித்த போலி செய்திகளை வெளியிட ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications