கத்தியைக் காட்டி கூகுள் பே கணக்கில் இருந்து பணம் பறித்த 8 பேர்: சிக்கியது எப்படி தெரியுமா?
இப்போது வரும் ஒரு சில தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் அந்த புதிய தொழில்நுட்பங்களை மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி கூகுள் பே கணக்கில் இருந்து பணம் பறித்த 8 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் போலீசாரிடம் சிக்கியது.

மக்கள் கூகுள் பே, பேடிஎம், போன் பே, உள்ளிட்ட செயலிகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கூகுள் பே பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்து கொண்ட ஹைடெக் வழிப்பறி கும்பல் சிக்கியதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

அதன்படி சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், தரமணி ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தசமயம் அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவரது கைக்கடிகாரம், கையில் இருந்த 3000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டது.

மேலும் ஆசை தீராத அந்த கொள்ளையர்கள், ஒரு படி மேலே சென்று ராஜாவின் செல்போனை பறித்து, கூகுள் பே செயலியின் பாஸ்வேர்டை மிரட்டி வாங்கியுள்ளனர். தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் ஒருவரின் வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அதன்பின்னர் இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார், உடனடியாக விசாரணையை முன்னெடுத்த தரமணி போலீசார், கூகுள் பே மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட போன் நம்பரை கைபற்றினர். அந்த எண் தரமணியை சேர்ந்த சத்யா என்பவரது எண் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிடித்த விசாரித்தனர்.

அந்த விசாரணையில், போன் நம்பர் மூலம் தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என திட்டமிட்ட வழிப்பறி கொள்ளையர்கள், நண்பரின் செல்போன் எண்ணுக்கு பணத்தை அனுப்பி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்,தரமணியை சேர்ந்த பாலமுருகன்,விக்கி சந்தோஷ்குமார், பிரகாஷ், என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து ராஜாவின் கைக்கடிகாரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டனர்.

பொதுவாக இதுபோன்ற பிரச்சனைகளில், பணத்தை இழந்தவர்கள் உடனடியாக சைபர் பிரிவு போலீசில் புகாரளித்தால், பணப் பரிவர்த்தனையை தடுக்க வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர். பின்பு இந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணப் பரிவத்தனை செயலி மூலம் பணம் பறிப்பது இதுவே முதல்முறை என்க்கூறும் போலீசார், கூகுள் பே, பேடிஎம் போன்ற பண பரிவத்தனை செயலிகளை பயன்படுத்துவர்கள் அதிக கவனமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications