பிஎஸ்என்எல் மூடுவிழாவா?- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் ஒரே நாளில் குட்-பை
பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இதனால் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறையவுள்ளது.

புதிய விருப்ப ஓய்வு திட்டம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை தனது ஊழியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு தேர்வு செய்து, ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்தது.

பிஎஸ்என்எல் பற்றிய வதந்திகள்
இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடப் போகிறார்கள் என்றும், தனியாருக்கு விற்கப் போகிறார்கள் என்றும் பல வதந்திகள் பரவலாகப் பரவி வந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை என்று உறுதிப்படத் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

நவீனமயமாகும் பிஎஸ்என்எல்
அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 74,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. ஆகையால் இதை விற்பதற்கோ அல்லது மூடப்படுவதற்கோ வாய்ப்பே இல்லை என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்
இம்முறையின் படி தனது ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டு, புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்றும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கணிப்புப்படி சுமார் 77,000 ஊழியர்கள் இத்திட்டத்தை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

75,000 ஊழியர்கள் முன்னதாகவே தயார்
இந்த புதிய திட்டம் ஜனவரி 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இதற்கான முன்பதிவும் துவங்கிவிட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கணித்தது போல் இதுவரை சுமார் 75,000 ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு திட்டத்திற்கு ஏற்றவர்கள் யார்?
இந்த புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்கள் தேர்வு செய்வதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 03, 2019-க்குள் விருப்ப ஓய்வு பெற விரும்பும் ஊழியர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும், 50 வயதைக் கடந்த அனைத்து நிரந்தர ஊழியர்களும் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்தது.

78 ஆயிரத்து 569 பேர் இன்று விருப்ப ஓய்வு
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில் அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் நிறுவனத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில் 78 ஆயிரத்து 569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








