கெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி!
இந்தியாவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 2020 ஆம் ஆண்டுக்குள் 5 ஜி சேவை நாடு முழுவதும் வழங்க தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்கள்
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான விதிகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அண்மைக் காலாண்டில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.

முன்னணி நிறுவனமான ஏர்டெல்லும் நஷ்டம்
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல்லும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல், கடந்த காலாண்டில் மட்டும் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ வருகை
ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோவின் சலுகையால் கவரப்பட்டுள்ளனர். செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தாலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேசமயம் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துதான் வருகின்றன.

எதிர்கால செயல்பாடுகள் அறிவிப்பு
இந்த நிலையில், தொலைத்தொடர்புத் துறைச்செயலர் அன்ஷூ பிரகாஷ் தலைமையில் துறைசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்ஷூ பிரகாஷ் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலத் திட்டச் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

மார்ச் மாதத்திற்குள் ஏலம்
அடுத்தக்கட்ட தொழில்நுட்பமான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஏலத்தின் மூலம் தொலைத்தொடர்புத் துறையின் நிதி, ஆரோக்கியமான நிலைமைக்குக் கொண்டுவரப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏலம் எடுக்கும் என எதிர்பார்ப்பு
இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதுமாக 4ஜி சேவை அளிக்க இன்னும் அரசு ஒப்புதல் வழங்கவில்லை.


Click it and Unblock the Notifications