இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கும் வரும் 5ஜி சேவை? மத்திய அமைச்சர் விளக்கம்.!
5ஜி சேவை ஆனது இந்தியாவில் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த 5ஜி சேவை உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை மூலம் தான் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

5ஜி சேவை எப்போது?
மேலும் இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதற்கு ஒரு பதில் கிடைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.

5ஜி அலைக்கற்றை ஏலம்
அதேபோல் மத்திய அமைச்சரவை இப்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக வரும் ஜூலை மாதத்திற்குள் ஏலத்தை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர்
சமீபத்தில் 5ஜி சேவை குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் ஆனது வரும் ஜூலை மாதம் இறுதிக்குள் நிறைவடையும். பின்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 5ஜி சேவைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சென்னை ஐஐடி வளாகத்தில்
அதேபோல் கடந்த மே மாதம் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார். குறிப்பாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,தனது போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து பரிசோதித்தார்.

4ஜி, 5ஜி தொழில்நுட்பம்
பின்பு இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அஷ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளது என்னவென்றால், முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இது பிரதமரின் கனவு, அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார். பின்பு இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும் என்றார்.

என்னென்ன நன்மைகள்?
5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.

சிறந்த முன்னேற்றம்
ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உதாரணமாக கூறவேண்டும் என்றால், 5ஜிதொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள்
ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி
அதேபோல் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.


Click it and Unblock the Notifications