அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் Reliance AGM: 5ஜி போன், ஜியோ லேப்டாப்.! முழு விவரங்கள்.!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44வது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (24 ஜூன் 2021) நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மக்கள் எதிர்பார்க்கும் மலிவு விலை லேப்டாப், 5ஜி போன் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தற்போது அதிகரித்துள்ளது. இதை கவனத்தில் வைத்து மலிவு விலை லேப்டாப் மாடலை வெளியிடக்கூடும் என்று எச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தின்போது ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த 5ஜி சேவையை தொடங்க உதவும் வகையில் புதிதாக ஒரு முழுமையான 5ஜி தீர்வை ஜியோ கண்டுள்ளதாக தெரிவித்தார். அதன்பின்பு 5ஜி தொழில்நுட்பத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளுக்கு ஜியோ 100 சதவிகிதம் உறுதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் 5ஜி சேவைக்கு முறையான அனுமதி கிடைத்ததும், சோதனைக்குதயாராக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு சந்தைபடுத்துதலுக்கு தயாராக இருக்கும் என்றும் முகேஷ் அம்பானி கூறியிருந்தார்.

அதன்பின்பு இந்திய சந்தையில் 5ஜி திறன் நிரூபிக்கப்பட்ட பின்னர், சர்வதேச அளவில் இருக்கும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஜியோ 5ஜி ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனால் இன்று நடைபெறும் இந்த வருடாந்திர கூட்டம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஜியோ-கூகுள் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யும் 5ஜி போன் மாடல் ரூ.5000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக 2ஜி பீச்சர் போன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி போன் மாடலை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், கூகுள்-ஜியோ நிறுவனங்களின் 5ஜி போன் தனிப்பயனாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாதனம் குறைந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது

கடந்த ஆண்டு ஜியோ நிறுவனம் குவால்காம், இன்டெல், பேஸ்புக் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. எனவே குவால்காம் கூட்டாண்மை மூலம் ஜியோ நாட்டில் முக்கியமான 5ஜி டூல்களை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் கூகுள்-ஜியோ 5ஜி போனில் குவால்காம் நிறுவனத்தின் சிப்செட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த கூகுள்-ஜியோ போனுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வழங்படும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஜியோபுக் லேப்டாப் குறித்த தகவல் ஒரு புகைப்படத்துடன் லீக் ஆனது. மேலும் இந்த ஜியோ லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும். ஜியோபுதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications