இது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்!
டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கவலை அளிப்பதாக உள்ளது என சீன தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின சீன தரப்பில் உயரிழப்பு எண்ணிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை பகுதியில் போர் விமானங்கள் குவிப்பு
லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

சீன செயலிகளை நீக்க வேண்டும்
அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தாக தெரிவித்தது.

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப்
இதையடுத்து டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பு
இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை
இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.

சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர்
இதுகுறித்த சீன தரப்பில் பதில் வந்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சுவோ லிஜியான் பேசினார். அதில் இந்திய நடவடிக்கையால் சீன கடுமையாகக் கவலைக் கொண்டுள்ளது எனக் கூறினார். அதோடு சீன நிறுவனங்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்ட உரிமைகளை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது என தெரிவித்தார்.

நிலைமையை கவனித்து கொண்டிருக்கிறோம்
மேலும் நிலைமையை கவனித்து கொண்டிருக்கிறோம் எனவும் சீன அரசாங்கம் எப்போதும் சீன வணிக நிறுவனங்களை சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட விதிமுறைகளுக்கு கட்டுபடுமாறு அறிவுறுத்தி வருவதாக அதில் குறிப்பிட்டார்.

டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி
இதற்கிடையில் டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் உத்தரவுக்கு தங்கள் நிறுவனம் கீழ்படிந்து நடக்கும் எனவும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து ரகசியத்தை காக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தங்களது பயனர்களின் எந்த ஒரு சிறு விவரங்களையும் சீன உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துக் கொண்டது கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications