தமிழகத்தில் ஆதார் சேவைகள் இனி விரைவாக கிடைக்கும்.. 50 புதிய நிரந்தர சேவை மையங்கள் திறப்பு..
நாட்டில் அனைத்து முக்கிய சேவைகளையும் பெறுவதற்கு ஆதார் (Aadhaar) அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனாலும் இந்த ஆதார் அட்டையில் பெரும்பாலும் பலரது தகவல்கள் பிழையாகவே இருக்கிறது. மேலும் முகவரி திருத்தம், கைபேசி எண்ணை இணைத்தல், கைரேகை மற்றும் கருவிழிகளைப் பதிவு செய்தல் போன்ற பல சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே தான் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனங்களில் நிரந்தர ஆதார் மையங்களைத் தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 50 நிரந்தர ஆதார் மையங்களையும், 79 பள்ளி முகாம்களையும் அமைத்துள்ளது தமிழக அரசு. குறிப்பாக இந்த ஆதார் மையங்கள் எல்காட் நிறுவனத்தின் சார்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

அதுவும் எல்காட் நிறுவனம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் இணைந்து இதுவரை 587 ஆதார் சேவை மையங்களை இயக்கி வருகின்றன. இதில் அரசு கேபிள் டிவி நிறுவனம் 327 நிரந்தர ஆதார் சேவை மையங்களை நடத்தி வருகிறது. மேலும் இப்போது கூடுதலாக அமைக்கப்பட்ட 50 மையங்களையும் சேர்த்தால் மொத்தமாக 637 நிரந்தர ஆதார் மையங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.
குறிப்பாக புதிய ஆதார் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண்களை இணைத்தல், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்தல் மற்றும் புகைப்படத்தைப் பதிவு செய்தல் போன்ற அனைத்து சேவைகளும் இந்த ஆதார் மையங்களில் வழங்கப்படுகின்றன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை நிரந்தர ஆதார் சேவை மையங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆதார் சேவை மையங்கள் தற்போது அதிகமாகத் திறக்கப்பட்டாலும், ஆதார் கார்டில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அப்டேட் ஆவதற்கு அதிக நாட்கள் எடுக்கின்றன எனவும் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. பின்பு சில திருத்தங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் இந்த புதிய ஆதார் சேவை மையங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் 79 பள்ளி முகாம்களையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம்களில் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) புதிய ஆதார் செயலியை (New Aadhaar App) அறிமுகம் செய்தது. அதுவும் இந்த ஆதார் செயலியானது, முகம் ஸ்கேன் செய்து (Face ID) உடனடியாக Login மற்றும் சரிபார்ப்பு செய்யும் வசதியை அளிக்கிறது.
புதிய ஆதார் செயலி ஆனது பயனர்களுக்கு தங்கள் ஆதார் விவரங்களை மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் கட்டுப்பாட்டுடன் தங்கள் ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் முறையில் வைத்திருக்க அனுமதிக்கிறது. பயனர்கள் இப்போது தங்கள் ஆதாரை ஒரு QR குறியீடு மூலம் பாதுகாப்பாகப் பகிர முடியும். மேலும், தாங்கள் பகிர விரும்பும் தனிப்பட்ட விவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் மட்டுமே தேவைப்பட்டால், உங்கள் முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற பிற முக்கியமான தகவல்களை நீங்கள் மறைக்க முடியும்.
இந்த புதிய ஆதார் செயலி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, எளிதான அணுகல் மற்றும் ஒரு முற்றிலும் காகிதமில்லா அனுபவத்தை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஆகிய இரண்டிலும் கிடைக்கும் இந்தச் செயலி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








