50 கிராம் பொங்கல் ரூ.80, 8 மாதம் வச்சு சாப்பிடலாம்: ரயில் பயணி வெளியிட்ட ஆவேச வீடியோ!
ரயிலில் 50 கிராம் அளவிலான பொங்கல் 80 ரூபாய் என விற்கப்பட்டு வருவதாகவும் இந்த பொங்கல் காலாவதியாகும் தேதி 8 மாதம் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியும் பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனைவரும் கட்டாயம் முகக் கவசம்
கொரோனா பரவலுக்கு மத்தியில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகளை தவிர வேறு யாரும் ரயில் நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்படி ரயில்நிலையங்களுக்குள் செல்லும் அனைவருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு அளித்த அனுமதி
தமிழகத்தை பொருத்தவரை மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மாவட்டங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

சென்னையில் இருந்து ரயில்
இதுகுறித்த அறிவிப்பில் சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி வரையிலும் அதேபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையில் இருந்து எழும்பூர் வரைக்கும், எழும்பூர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மற்றும் கன்னியாகுமரி முதல் எழும்பூர் வரைக்கும், சென்னை எம்ஜிஆர்(சென்ட்ரல்) முதல் மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வரைக்கும் அதேபோல் திருச்சி- நாகர்கோவில் முதல் நாகர்கோவில்- திருச்சி வரைக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது.

பல்லவன் விரைவு ரயில்
இதில் பல்லவன் விரைவு ரயில் தினசரி காலை காரைக்குடியில் இருந்து சென்னைக்கு திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் ஐஆர்சிடிசி ஒப்பந்ததாரர்களின் மூலம் உணவுப் பொருட்கள் பயணிகளிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு ரயில்களில் வழங்கப்படும் உணவு விலை
கொரோனா காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வழங்கப்படும் உணவு விலை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதில் ஒரு பயணி ஆக்ரோஷமாக உணவு பொருட்களின் தரம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
50 கிராம் பொங்கள் 80 ரூபாய்
பல்லவன் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 50 கிராம் அதாவது இரண்டு கரண்டி அளவு இருக்கும் பொங்கள் 80 ரூபாய் என்றும் அதன் காலாவதி (வேலிடிட்டி) 8 மாதங்கள் என குறிப்பிட்டுள்ளதை வீடியோவில் சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு தெற்கு ரயில்வே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறைந்த அளவில் அதிக விலை
ஐஆர்சிடிசி பணியாளர்களை அழைத்து இதுபோன்று குறைந்த அளவில் அதிக விலையில் தரமின்றி விற்கப்படும் துரித வகை உணவுகள் விற்பதை தவிர்க்க வேண்டும் என புகார் அளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications