யுனிவர்சிட்டி தேர்வில் சாட்ஜிபிடி! சிக்கிய 400 மாணவர்கள்! இனிமேல் PLAGIARISM சாப்ட்வேர் விடாது!
புகழ்பெற்ற பல்கலைகழங்களில் பயிலும் 400 மாணவர்கள் தேர்வு எழுத சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்தி மாட்டிக்கொண்டதால், இனிமேல் பதில் தாள்களை (Answer Sheet) ஆன்டி-பிளேகியரிசம் (Anti - Plagiarism) சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
சமீப காலமாக நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, சாட்ஜிபிடி மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. மனித அறிவாற்றலை மழுங்க செய்துவிடும் போலிருக்கிறது. மனிதர்களையும் சும்மா சொல்லிவிட முடியாது, டெக்னாலஜி வளர வளர அதன் மூலம் தங்களது அத்தியாவசிய வேலைகளை எப்படி குறைப்பது அல்லது தவிர்ப்பது என்றே சிந்திக்கின்றனர். இப்போது, வந்த சாட்ஜிபிடியையும் அப்படித்தான் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த சாட்ஜிபிடியின் அதீத வளர்ச்சியை பார்த்தால், அதை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக்கூடாது என்று சட்டத்திட்டங்களை கொண்டுவர தோன்றுகிறது. ஏனென்றால், அதை வைத்து எவ்வளவுக்கு எவ்வளவு ஆக்கப்பூர்வமான காரியங்கள் நடக்கிறதோ அதே அளவுக்கு நாள்தோறும் தினுசு தினுசாக குற்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. அண்மையில் தெலங்கானா மாநிலத்தில் நடந்த அரசு தேர்வில் கூட சாட்ஜிபிடியை பயன்படுத்திய தேர்வர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது, பல்கலைகழக மாணவர்களும் தேர்வு எழுத சாட்ஜிபிடியை பயன்படுத்தியது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. சுமார் 400 மாணவர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்தியிருப்பதால், பல்கலைகழகங்கள் ஒன்று சேர்ந்து, அதற்காக புதிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது மட்டுமல்லாமல், மற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களிலும் மாணவர்கள் எழுதும் பதில் தாள்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
இங்கிலாந்து நாட்டின் மிகவும் பெயர்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் (London School of Economics and Political Science), லண்டன் பல்கலைக்கழகம் (University Of College London) மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் (University of Glasgow) உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் மாணவர்களில் 400 பேர் தங்களது தேர்வுகளை எழுத சாட்ஜிபிடியை பயன்படுத்தி இருக்கின்றனர்.
ஆரம்பத்தில், சில மாணவர்கள் மீது மட்டுமே சந்தேகம் எழுந்த நிலையில், மற்ற மாணவர்களின் பதில் தாள்களையும் அந்தந்த நிர்வாகங்கள் ஆய்வு செய்ய தொடங்கின. அப்போது, கென்ட் பல்கலைக்கழகம், பிர்க்பெக் மற்றும் லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகம் என்று அங்கு பயிலும்
நூற்றுக்கணக்கான மாணவர்களும் அடுத்தடுத்து சிக்கினர்.
இதனால், அதிர்ச்சியைடந்த பல்கலைகழகங்கள், விசாரணை குழு ஒன்றை அமைத்து இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பல்கலைகழங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே பல்வேறு பல்கலைகழகங்கள் தங்களது நிறுவனத்தின் பெயரை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
இதுபோன்ற முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போனால், மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகும் என்று தேர்வு குழுவில் இடம்பெற்ற போராசியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால், மாணவர்களின் அசைன்மென்ட், பதில்தாள்களை ஆய்வு செய்யவே தனியாக ஒரு குழு அமைக்கவும் இங்கிலாந்து பல்கலைகழக மானியம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, முக்கிய பல்கலைகழகங்களில் ஆன்டி-பிளேகியரிசம் (Anti-Plagiarism) என்னும் சாப்ட்வேர் மூலம் மாணவர்களின் பதில் தாள்களை ஆய்வு செய்யவும் புதிய நடைமுறை கொண்டுவர திட்டமிட்டப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இதேபோல பல நாடுகளில் சாட்ஜிபிடியை வைத்து தேர்வு எழுதும் பழக்கம் மாணவர்களிடையே துளிர்விட தொடங்கிவிட்டது.
இதானால் வரும் காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








