ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?
சென்னை தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் செய்தியாளர் வீட்டில், நள்ளிரவில் ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
சென்னை, தாம்பரம் அருகில் உள்ள சேலையூா் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவர் தனது தாயார் ரேவதி மற்றும் அவரின் மனைவி அர்ச்சனா ஆகிய இருவருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் கசிவினால் தீ விபத்து
வழக்கம்போல் நேற்று தனது குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார் பிரசன்னா. வீட்டிலிருந்த பூஜை அறையில் ஏற்பட்ட மின் கசிவினால் வீட்டிற்குள் தீப்பற்றியுள்ளது, தீப்பற்றிய சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த ஃபிரிட்ஜ் தீப்பிடித்து வெடித்துள்ளது.

புகையில் சிக்கி மூச்சுத் திணறல்
ஃபிரிட்ஜ் வெடித்ததைத் தொடர்ந்து வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியுள்ளது. வீடு முழுவதும் தீ பற்றிக்கொண்டதனால் வீட்டிலிருந்தவர்களால் வெளியேற முடியவில்லை. வீட்டிலிருந்த மூவரும் புகையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தினால் அக்கம்பக்கத்தினருக்குக் காலையில் தான் விபத்து நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர், விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வீட்டுக்குள் சென்று இறந்தவர்களின் உடலை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை
வீட்டில் ஏற்பட்ட மின் கசிவினால் தான் ஃபிரிட்ஜ் வெடித்து, இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிர் இழந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுபோன்ற அசம்பாவிதங்களிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வது எப்படி?
- ஃபிரிட்ஜ்கள் வெடிப்பதற்கான முக்கிய காரணம், பிரிட்ஜ் இல் உள்ள கம்ப்ரெஸ்ஸர் தான்.
- கம்ப்ரெஸ்ஸரில் உள்ள வாயுக்கள் பிளாக் ஆகி ஓவர் ஹீட் ஆகுவதனால் தான் ஃபிரிட்ஜ்கள் வெடித்துத் தீப்பிடிக்கின்றன.
- இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடக்காமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள இதைப் பின்பற்றுங்கள்.
- ஃபிரிட்ஜ் கம்ப்ரெஸ்ஸர்களை ஆண்டுக்குக் குறைந்தது 2 முறையாவது சுத்தம் செய்யுங்கள்.
- ஃபிரிட்ஜ்களை சர்வீஸ் அல்லது ஜென்ரல் செக் அப் செய்வது அவசியம்.
- இதனால் கம்ப்ரெஸ்ஸர்களில் உருவாகும் பிளாக்குகள் தவிர்க்கப்படும், பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் காக்கப்படுவீர்கள்.
- வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் ஃபிரிட்ஜ்ஜை "டீஃபிரோஸ்ட் (Defrost)" செய்துவிட மறக்காதீர்கள்.
- அடுப்பு, குக்கர் அருகில் அல்லது நேரடி சூரிய ஒளிக்குக் கீழ் ஃபிரிட்ஜ்களை பயன்படுத்தாதீர்கள்.
- ஃபிரிட்ஜ் இன் பின்னால் காற்றோட்டம் இருக்கும்படி, சிறிது இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- இதனைப் பின்பற்றினால் எந்தவித வித அசம்பாவிதமும் நிகழாமல், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications