ஆன்லைன் வகுப்புக்கு 27% மாணவர்களிடம் சாதனங்கள் இல்லை: ஆய்வுத் தகவல்!
கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புத் தேவை அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் வகுப்புக்கு 27 சதவீத மாணவர்களிடம் சாதனங்கள் இல்லை என என்சிஇஆர்டி ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும். 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் 9 முதல் 12 வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
தமிழகத்தை பொருத்தவரை குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு சேனல் என்றும் 5 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்
பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) ஆய்வு ஒன்று நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 27 சதவீத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற சாதனங்கள் கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆன்லைன் கல்வி பயில மின் தடை மற்றும் மின் செயலிழப்பு 28 சதவீத மாணவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

புத்தகங்களையே நம்பியுள்ளனர்
ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு அதிகம் பயன்படுத்துவது ஸ்மார்ட்போன்தான் எனவும் 36 சதவீத மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு புத்தகங்களையே நம்பியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள்
இதுபோன்ற நிலைகளை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ அறிக்கைபடி, போதுமான வசதி இருப்பவர்கள், வரையறுக்கப்பட்ட வசதி இருப்பவர்கள், எதுவும் இல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் ஆன்லைன் ஏதுவாக பாடம்படிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications