இதுதாங்க மிடில் கிளாஸ் லைஃப்.. ஒரு ஆப்பிள் போன் இல்ல, பைக் இல்ல.. ஆனால், ரூ.1.5 லட்சம் சம்பளம்!
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, படிப்பு மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருமென்ற நம்பிக்கையில், இளைமைக் காலத்தையே முழுவதும் தொலைத்து, ஆசைகளையும், கனவுகளையும் மறந்து, கடமைகளை மட்டுமே நோக்கிப் பயணிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார், சுஷ்ருத் மிஸ்ரா என்னும் இளைஞர்.
இந்தியாவில் மட்டுமே வித்தியாசமான வாழ்க்கை முறைகளை எளிதில் பார்க்க முடியும். ஒரு பக்கம் பரம்பரை சொத்துக்களுடன் கேட்டது கிடைக்கும் பணக்கார குடும்பத்தில் பிறந்த குழந்தைகளும், மறுபக்கம் வாடகை வீட்டில் செலவு செய்யவே கணக்கு பார்க்கும் மிடிஸ் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளும் இருப்பார்கள். ஆனால், இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இணைந்தே படிப்பார்கள்.

சமுதாயத்தில் ஒன்றாகவே வளர்வார்கள். இந்த இரண்டு வாழ்க்கை முறையில் இருந்தும் படிப்பை முடித்து, நல்ல வேலைக்கு செல்லும்போது கூட மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைத் தரம் அவ்வளவு எளிதில் மாறிவிடாது. இவர்களின் சிந்தனை பைக், கார்கள், ஆப்பிள் போன்கள் என்று இருக்காது, வீட்டின் கடன்களை கட்டுவது, வயதான பெற்றோர்களின் மருத்துவ செலவை கவனித்து கொள்வது, வீட்டிற்கு தேவையானதை செய்வது என்பதிலேயே இருக்கும்.
இவர்களை வாழத் தெரியாதவர்கள் என்று கூட பலர் சுட்டிக்காட்டியிருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இந்த மிடில் கிளாஸ் இளைஞர்களுக்கான மதிப்பு இன்றளவும் குறையவில்லை என்பதை லக்னோவில் நடந்த சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விசி மீடியாவில் (VC Media) இணை நிறுவனராக பணியாற்றி வருவபர் சுஷ்ருத் மிஸ்ரா (Sushrut Mishra). 23 வயதான இவருக்கு இப்போது மாதம் சம்பளம் ரூ.1.5 லட்சமாக இருக்கிறது.
இவ்வளவு சம்பளம் வாங்கும் இவரிடம் பைக் கிடையாது, ஏன் ஆப்பிள் (Apple) போன் கூட கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இவருக்கு அதுபோன்று ஆடம்பரமாக வாழ்வதில் துளிக்கூட விருப்பம் செல்லவில்லை என்பதே உண்மை. இந்த சம்பளத்தை அவர், தனது ஓய்வு பெற்ற பெற்றோருக்காக செலவழிக்கிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்துக்காக சேமிக்கிறார். வீட்டின் அனைத்து செலவுகளையும் அவரே பார்த்துக் கொள்கிறார்.
இவரிடம் பைக் கூட இல்லாததால், அவரது நண்பர்கள் பலர், அடிக்கடி இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர். இதற்கெல்லாம் விளக்கமளிக்கும் விதமாக சுஷ்ருத் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "23 வயதான நான் மாதம் ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கிறேன். இப்போது வரையில், நான் எனக்கான வாழ்க்கையை தொடங்கிவில்லை.
என்னிடம் ஆப்பிள் போன் கிடையாது. பைக், கார் கிடையாது. ஏனென்றால், இந்தியாவில் பிறந்த ஒரு சாதாரண மகனின் கடமைகள் எனக்கும் இருக்கிறது. ஓய்வு பெற்ற பெற்றோரை கவனிக்க வேண்டும். வீட்டு பில்களை கட்ட வேண்டும். எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். இதையே நான் கூற விரும்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதேபோல தங்களுக்கும் பொறுப்புகள் உள்ளதாக ஆயிரக்கணக்கான ட்வீட் வாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல, இளைமையில் வாழ்க்கையை வாழாமல் விட்டுவிடாதீர்கள் என்று பலர் அறிவுரை வழங்கவும் தொடங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








