நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா: சொந்தமாக விமானம் உருவாக்கிய 17 வயது தமிழக சிறுவன்!
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயதான 12 ஆம் வகுப்பு மாணவன் தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திரும்பியுள்ளார். காரணம், இந்த சிறுவயதிலேயே இவர் சொந்தமாக விமான மாடல்களை தனது வீட்டிலேயே உருவாக்கியுள்ளார். இது பற்றிக் கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய-புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்கும் மாணவன்
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன்பட்டில் வசிக்கும் முத்துக்குமார் (17) என்ற 12 ஆம் வகுப்பு மாணவர், புதிய-புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட முத்துக்குமார் தற்போது சொந்தமாக விமான மாடலை உருவாக்கியுள்ளார். இது அப்பகுதி மக்களை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆன்லைன் வகுப்பு போக எஞ்சி உள்ள நேரங்களை பயனுள்ளதாய் மாற்றிய சிறுவன்
இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு நாட்களில் மாணவர்களுக்குப் படிப்பது என்பதே மறந்துபோய்விட நிலையில், முத்துக்குமார் தனது ஆன்லைன் வகுப்பில் அதிக ஆர்வம் காட்டுவதோடு, எஞ்சி உள்ள நேரங்களில் இது போன்ற அறிவியல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதைப் பொழுதுபோக்காக மாற்றியுள்ளார்.

வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை வைத்து புதிய பொருட்கள் உருவாக்கம்
தினமும் ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பின்பு, எஞ்சி உள்ள நேரத்தை பயனுள்ளதாய் மாற்றி அமைக்கத் திட்டம் செய்த முத்துக்குமார், கடந்த 10 மாதங்களில் புதிய கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்கியுள்ளார். அதிலும் சிறப்பு என்னவென்றால், இவர் உருவாக்கிய அனைத்து கண்டுபிடிப்புகளும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள் மற்றும் வீணாய் போகும் தேவையற்ற குப்பைகள் என்று நாம் கருதும் சில பொருட்களை வைத்து உருவாக்கியுள்ளார்.

6 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட பெரிய விமான மாடல்
இப்படி தனது வீட்டில் இருந்து கிடைத்த பழைய பொருட்களை வைத்து முத்துக்குமார் சுமார் 6 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட பெரிய அளவு விமான மாடலை சொந்தமாக உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள விமானத்தின் இருபுறமும் LED விளக்குகள் மற்றும் பேட்டரியால் சுழலும் விமான மின்விசிறிகள் போன்ற கருவிகளையும் அவருடைய விமான மாடலில் இணைத்து பொறுத்தியுள்ளார்.

விமானத்துடன் அதற்கான ரிமோட் கண்ட்ரோலரையும் உருவாக்கிய சிறுவன்
அதுமட்டுமின்றி, இந்த மாடல் விமானத்தைக் கட்டுப்படுத்த ஒரு ரிமோட் கண்ட்ரோலரையும் அவர் கண்டுபிடித்துள்ளார். இந்த விமானத்தின் உருவாக்கத்திற்காக சில பாகங்களை அவர் ஆன்லைன் வலைத்தளம் மூலமாக வாங்கியுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார். இதற்காக இவர் தற்போது வரை ரூ.15000 செலவு செய்துள்ளார். இவரின் இளைய கனவோடு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் கிடைத்ததால், வானம் தொடும் தூரம் தான் என்பதை இவரின் முயற்சி மற்ற மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications