கடன் தரமுடியாது.,அப்டியா ரைட்டு.,இங்க சிக்கன் சாப்பிட்டா கொரோனா வரும்: சிறுவன் கிளப்பிட்ட வதந்தி!
சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா, இந்த வைரஸ் நாடு முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் வழக்கம் போல் பல்வேறு வகையான வதந்திகளும் பரவி வருகிறது. கோழிக் கறி மூலம் கொரோனா பரவுகிறது எனவும் சாலையில் திரியும் நாய்கள் மூலம் கொரோனா பரவுகிறது என பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது.

நாமக்கல் வந்த முதலமைச்சரிடம் கோரிக்கை
நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கரின் தாயார் பழனியம்மாள் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கேபிபி பாஸ்கரின் குடும்பதாருக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் வந்து, அவர்களது குடும்பத்தாரை சந்தித்தார்.

தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள்
அப்போது நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் இணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

சுமார் 250 கோடி ரூபாய் நஷ்டம்
அதில் கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவிய வதந்தியால் இதுவரை சுமார் 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

திடீரென கூட்டம் குறைந்த சிக்கன் கடை
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த தனியார் சிக்கன் கடையில் திடீரென கூட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் கடை முதலாளி திகைத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த கடை சிக்கன் சாப்பிட்டவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்
அந்த நேரத்தில் அவரது வாட்ஸ் ஆப்பிற்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் அவரது கடைப் பெயரை குறிப்பிட்டு அந்த கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் போலீஸில் புகார்
இதை பார்த்த கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வாட்ஸ் ஆப் வீடியோ-வில் பேசியது 17 வயது மதிக்கத்தக்க சிறுவனின் குரல் என தெரியவந்தது.

கடனுக்கு சிக்கன் தராத காரணத்தால் கிளப்பிவிட்ட வதந்தி
இதையடுத்து நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கடைக்காரரிடம் கடனுக்கு சிக்கன் கேட்டதாகவும் அதை தர மறுத்த காரணத்தால் கொரோனா பரவுகிறது என வதந்தி பரப்பி வீடியோ பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவல்களின் உண்மைத் தன்மை அறிய வேண்டும்
17வயது என்பதால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுபோன்ற பல வதந்திகளும் தற்போது வரை வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களிலும் வதந்திகள் பரவி வருகிறது. எனவே அனைத்தின் உண்மைத் தன்மை அறிந்து பகிரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications