168 ரயில்கள் ரத்து., ரிசர்வேஷன் டிக்கெட் கேன்சல்: ரயில்வே துறை அதிரடி., அடுத்து என்ன?
கொரோனா அச்சம் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 168 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 172 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 38 பேருக்கு அதிகரித்து இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 172 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மாநிலம் வாரியாக என்று பார்க்கையில் மகாராஷ்டிராவில் தான் இந்த தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் இந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது இடத்தில் கேரளா
மகாராஷ்டிராவிற்கு அடுத்தப்படியாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்று பார்க்கையில் கேரளாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலம் கலாபுராகில் 76 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
அதேபோல் டெல்லியை சேர்ந்த 68 வயது பெண் ஒருவரும் மும்பையைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இறப்பு குறித்து தெரிவிக்கையில் இவர்களுக்கு முன்னதாகவே உடலில் பாதிப்பு இருந்ததாகவும் கொரோனா தாக்கியவுடனே உயிரழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற மாநிலத்தின் பாதிப்பு
அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 16 பேரும் கர்நாடகாவில் 11 பேரும் கொரோனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். டெல்லியில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு
தமிழகத்தை பொருத்தவரையில் இதுவரை 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவரான காஞ்சிபுரம் என்ஜினியர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேபோல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு பரவி கிடக்கிறது.

அடுத்தடுத்து அதிகரி்க்கும் கொரோனா பாதிப்பு
இந்தோனேஷியாவில் இருந்து தெலங்கானா வந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எதிர்பார்க்காத விதமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விழிப்புணர்வு தகவலும் வந்துக் கொண்டே இருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை, பல்வேறு அலுவலகத்தில் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் வணிக வளாகங்கள் மற்றும் கூட்டம் கூடும் இடங்களை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்பதிவு டிக்கெட்கள் ரத்து
கொரோனா அச்சத்தின் காரணமாக ரயில் முன்புதிவு செய்திருந்த பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்து வருகின்றனர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்வதை இரண்டு வாரத்துக்கு மட்டும் தள்ளி வைக்குமாறு அறிவுரை விடுத்தார். அதேபோல் ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

168 ரயில்களின் சேவை ரத்து
இதன் காரணமாக நாடு முழுவதும் 168 ரயில்களின் சேவை நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களின் பணம் மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உள்நாட்டு விமான பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம்
இந்த அனைத்து விளைவிற்கும் காரணம் கொரோனாவிற்கு அதிகாரப்பூர்வமான மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை என்பதே. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications