"கடன் தொல்லை" ஆன்லைனில் கிட்னி விற்க முயன்ற 16 வயது சிறுமி! அரங்கேறிய கொடுமை சம்பவம்.!
குண்டூரை சேர்ந்த மாணவி ஒருவர் கடனை அடைப்பதற்கு தனது Kidney-ஐ ஆன்லைன் மூலம் விற்க முயன்று கொடுமையான நிகழ்வை சந்தித்திருக்கிறார். என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம். இதுகுறித்த நிகழ்வை அறிந்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் பிறருக்கும் பகிர்ந்து பாதுகாப்பாகும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி அறிவுறுத்துவது அவசியம்.

காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விஷயம் வெளிவந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஆவார். இவருக்கு நேர்ந்த கொடுமையான நிகழ்வை விரிவாக பார்க்கலாம்.
கல்லூரி மாணவியான இவர், அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ரூ.2 லட்சத்தை எடுத்து செலவு செய்துள்ளார். தந்தைக்கு தெரியாமல் எடுத்த தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக தனது கிட்னியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. தொடர்பு கொண்ட நபர், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஒருவருக்கு கிட்னி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பதிவிட்டுள்ளபடி கிட்னி கொடுத்தால் ரூ.7 கோடி கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

இதுதொடர்பான பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு மருத்துவமனையின் பெயர், மருத்துவர் போட்டோ, அட்ரஸ், வாட்ஸ்அப் நம்பர் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த அந்த மாணவியும் இது உண்மை தான் என நம்பி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கிட்னிக் கொடுப்பதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவித்ததை அடுத்து மறுபுறம் பேசிய நபர் 7 கோடியில் முதலில் பாதி தொகையும் கிட்னி கொடுத்தப் பிறகு பாதித் தொகையும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். சரி, என்று அந்த மாணவி ஒப்புக் கொண்ட உடன், மாணவியின் தந்தை வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டு விட்டதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் அந்த மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த பணம் அமெரிக்க டாலரில் அனுப்பப்பட்டிருக்கிறது எனவும் இதை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு வரி செலுத்த வேண்டும் எனவே ரூ.16 லட்சம் முதலில் செலுத்தும்படி மறுபுறம் இருந்த நபர் அந்த மாணவியிடம் கேட்டிருக்கிறார்.

இவை அனைத்தும் உண்மை என்று நம்பிய அந்த மாணவி தன் நண்பர்கள் உட்பட தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் திரட்டி அதை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவ்வளவு தான் கதை முடிந்தது என்று தோன்றலாம். ஆனால் அதுதான் இல்லை. தனது தந்தையின் வங்கிக் கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை என்று புலம்பி தவித்த அந்த மாணவி தொடர்ந்து அந்த நபரின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தான் கொடுத்த பணத்தை கேட்டிருக்கிறார்.
பணம் வேண்டும் என்றால் இந்த விலாசத்துக்கு வரும்படி அந்த நபர் டெல்லி அட்ரஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதையும் நம்பி அந்த மாணவி டெல்லிக்கு விமானத்தின் மூலம் சென்றிருக்கிறார். அங்கு சென்று போன் அடித்து பார்த்தப்போது தான் தெரிந்துள்ளது இது அனைத்தும் ஏமாற்று வேலை என்று. காரணம் அந்த நபர் அந்த இடத்திற்கு வரவும் இல்லை பின் போனை எடுக்கவும் இல்லை.
இதனால் விரக்தி அடைந்த அந்த மாணவி போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். தொடர்ந்து போன் ஸ்விட்ச் ஆஃப் இல் இருந்ததையடுத்து அந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் அந்த மாணவியை போலீஸார் கண்டுபிடித்து விசாரித்த போது தான் இந்த அனைத்து உண்மையும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விசாரணையை போலீஸார் நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications