15% ரீசார்ஜ் விலை உயர்வு.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரவிருந்தது.. திடீர் ஒத்திவைப்பு.. ஏன்? எப்போது வரை?
ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vi) என அனைத்து தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களுக்கும், 2026 மார்ச் மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட 15% ரீசார்ஜ் கட்டண விலை உயர்வானது, ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்? எப்போது வரை ஒத்திவைக்கப்பட உள்ளது? மார்ச் 2026 இல் எதிர்பார்க்கப்பட்ட ரீசார்ஜ் விலை உயர்வானது (Tariff Hike) தற்போது 2026 டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களால் உருவாகும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றால் நுகர்வோர் மனநிலையில் ஏற்கனவே அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாகவே மார்ச் 2206 இல் எதிர்பார்க்கப்பட்ட விலை உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தாமதம் கட்டமைப்பு ரீதியானது அல்ல, மாறாக ஒரு தந்திரோபாயமே என்றும், கட்டண சரிசெய்தல்களுக்கான (கட்டணங்களை உயர்த்துவதற்கான) அடிப்படை காரணிகள் உறுதியாக அப்படியே தான் இருக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வி நிறுவனத்திற்கு கட்டண சீரமைப்பு தேவைப்படுவதும், ஜியோவின் முதலீட்டாளர்களால் செய்யப்படும் மூலோபாய பங்கு விற்பனைகளுமே, அடுத்தடுத்த ஈராண்டு கட்டண உயர்வுகளுக்குக் காரணமாக அமையும்" என்று ஆம்பிட் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ரீசார்ஜ் விலை உயர்வு அப்படியே காணாமல் போய்விடாது; நிச்சயம் வரும், கொஞ்சம் தாமதமாக வரும்.
சந்தாதாரர் மீட்சி: ஜனவரி 2026-க்கான தொழில்துறை தரவுகளின்படி, நிகர வயர்லெஸ் சந்தாதாரர் சேர்க்கை டிசம்பரில் 1.5 மில்லியனாகவும், அக்டோபரில் 0.4 மில்லியனாகவும் இருந்த நிலையில், தற்போது 2.4 மில்லியனாக மீண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் முறையே 1.6 மில்லியன் மற்றும் 1.2 மில்லியன் பயனர்களை சேர்த்து, சந்தாதாரர் சேர்க்கையில் முன்னிலை வகித்தன.
அதே நேரத்தில், வோடஃபோன் ஐடியா மெதுவான வேகத்தில் இருந்தாலும், தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வந்தது. ஒட்டுமொத்த நிகர சேர்க்கையில், ஜியோவின் 2.43 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஏர்டெல் 4.4 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்து ஜியோவை விஞ்சியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஏர்டெல்லின் வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பகுதி, குறைந்த சராசரி வருவாய் விகிதத்தைக் கொண்ட மெஷின்-டு-மெஷின் பிரிவிலிருந்து வந்தது.
எம்2எம் பிரிவில் ஏர்டெல் 3.2 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்தது. அதனை தொடர்ந்து ஜியோ 0.9 மில்லியனையும், வோடஃபோன் ஐடியா 0.3 மில்லியனையும் சேர்த்தன. அதே நேரத்தில், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனமானது 0.1 மில்லியன் சந்தாதாரர்களை இழந்தது. இந்த துறையின் எம்2எம் சந்தாதாரர் எண்ணிக்கை ஜனவரி 2026 இல் 4.3 மில்லியன் அதிகரித்து 113.5 மில்லியனாக உயர்ந்தது.
இந்த வளர்ச்சி வேகம் பிராட்பேண்ட் சேவைக்கும் விரிவடைந்தது. ஜியோ தனது ஃபிக்ஸட் வயர்லெஸ் அக்சஸ் முன்னெடுப்பின் ஆதரவுடன், குறிப்பிட்ட மாதத்தில் 0.78 மில்லியன் ஹோம் பிராட்பேண்ட் பயனர்களை சேர்த்தது. அதே நேரத்தில், பார்தி ஏர்டெல் தனது சமீபத்திய வளர்ச்சி பாதையை தக்கவைத்துக்கொண்டு 0.62 மில்லியன் பயனர்களைச் சேர்த்தது. மேலும், 5ஜி ஃபிக்ஸட் வயர்லெஸ் பிரிவில் 70% க்கும் அதிகமான சந்தை பங்குடன் ஜியோ தனது ஆதிக்க நிலையை தக்கவைத்து கொண்டது!
ஏஆர்பியு என்கிற ஒரு பயனருக்கான சராசரி வருவாய்க்கான இயக்கவியல் (ARPU Dynamics): அதிகரித்து வரும் டேட்டா பயன்பாடு, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் ஈராண்டு கட்டண உயர்வுகள் ஆகியவை இணைந்து, ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user) 7% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








