பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?
ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து ஆபாசமான தகவல்களைப் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேமிங்கிற்கு அடிமையான 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் மொபைல் டிவைஸை தவறாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அவரது பெற்றோரை சமூக ஊடகம் வழியாக வேறு ஒரு நபர் போல் தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

13 வயது சிறுவன் செய்த நம்ப முடியாத செயல்கள்
வெறும் 13 வயது சிறுவன் எப்படி இது போன்ற செயலை செய்தார் என்பது வினோதமாக இருந்தாலும், இவர் செய்துள்ள ஒட்டுமொத்த சேட்டைகளின் பட்டியலைக் கேட்டால் நீங்களே வாய் அடைத்துப் போவீர்கள். கேமிற்கு அடிமையான சிறுவன், அவரது பெற்றோரின் போன்களை திருட்டுத்தனமாக ஹேக் செய்து, அந்த ஸ்மார்ட் போன் சாதனங்களில் இருந்து முழுத் தரவையும் தவறாகப் பயன்படுத்திவிட்டு அவற்றை அழித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சொந்த பெற்றோரை பிளாக்மெயில்
இதுமட்டுமின்றி, அவர் சமூக வலைத்தளம் வழியாக ஒரு போலி கணக்கை உருவாக்கி, அவரின் சொந்த பெற்றோரை பிளாக்மெயில் செய்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சிறுவனின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக வழக்கை மேலும் விநோதமாக்கியுள்ளது. பெற்றோர்கள் ஒரு கட்டத்தில், முகம் தெரியாத நபரால் கொடுக்கப்படும் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போலீசில் புகாரளிக்க முடிவு செய்துள்ளனர்.

மனமுடைந்த பெற்றோர்கள்
இறுதியில், அந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் இணைந்து தங்களுக்கு நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்து போலீசில் தெளிவாகப் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, ஒரு தொழில்முறை ஹேக்கிங் தாக்குதலாகப் பார்க்கப்பட்டதன் பின்னணியில் போலீசார் வழக்கை விசாரிக்கத் துவங்கினர். தங்கள் குழந்தையின் தலையீடு இருப்பது பற்றி அறியாத பெற்றோர், குற்றவாளி பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாகக் காத்திருந்துள்ளனர்.

ஸ்மார்ட்போன்களில் விசித்திரமான அனிமேஷன்
போலீசில், அவர்கள் புகார் அளிக்கும் போது, இருவரின் ஸ்மார்ட்போன்களும் விசித்திரமான அனிமேஷன்களுடன் டிஸ்பிளேவை ஒளிரச் செய்தது என்று பெற்றோர்கள் சைபர் செல்லிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். ஜெய்ப்பூர் போலீஸ் சைபர் நிபுணர் முகேஷ் சவுத்ரியின் கூற்றுப்படி, பெற்றோர்கள் தங்கள் வீட்டின் சுவர்களில் சிப் மற்றும் புளூடூத் இயர்போன்கள், கேமராக்கள் போன்ற சாதனங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சொந்த வீட்டிற்குள் பக் மற்றும் கேமரா வைத்த சிறுவன்
ஆம், அவர்களின் வீட்டில் பக் வைக்கப்பட்டுள்ளதைக் கவனித்துள்ளனர். இந்த சாதனங்களை வைத்து யாரோ தங்கள் குடும்பத்தைக் கண்காணிக்க முயல்கின்றனர் என்ற பீதியில் காவல்துறையிடம் வந்து புகார் அளித்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார். இவர்களுடன் நடக்கும் அனைத்து வினோத சம்பவங்களுக்கும் அவர்களின் மகன் தான் காரணம் என்பதை அறியாமலே சைபர் செல் துறை விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் மாமா மீது சந்தேகம்
போலீசார் விசாரணையைத் துவங்கிய சிறிது நேரத்திலேயே, இந்த குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான் இதையெல்லாம் செய்து வருகின்றனர் என்று போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்ததாக சவுத்ரி கூறினார். ஆனால், முதலில் சிறுவனின் மாமா மீது சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், அவரை விசாரணை செய்த போலீசாருக்கு சிறுவன் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

சிறுவன் பக்கம் போலீஸ் திரும்பியதற்கு காரணம் இதான்
காரணம், மாமாவிற்குச் சொந்தமான ஸ்மார்ட்போனை அதிக நேரம் சிறுவன் தான் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார். இவரின் ஸ்மார்ட் போனில் இருந்து தான் ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். சிறுவன் தொலைப்பேசியை அடிக்கடி பயன்படுத்தியதைத் தொடர்ந்து அவர் தான் இந்த செயலையும் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நகர்ந்துள்ளது.

பெற்றோரைக் ஹேக்கர் கொன்றுவிடுவதாக மிரட்டல்
இது குறித்து போலீசார், அந்த சிறுவனிடம் விசாரணை செய்த போது, முதலில் அவர் ஒரு ஹேக்கரால் மிரட்டப்பட்டார் என்று கூறியுள்ளார். ஹேக்கர் சொன்னதைச் செய்யாவிட்டால், அவரது பெற்றோரைக் ஹேக்கர் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக அந்த சிறுவன் போலீசிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், போலீசார் இதை நம்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்
இறுதியில் போலீசார், பெற்றோர்களிடம் தங்களுடைய 13 வயது மகன் தான் அவர்களை மிரட்டி வந்துள்ளார் என்ற உண்மையைப் போட்டுடைத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரைக் கடுமையாக விசாரித்தபோது, ஒரு ஹேக்கரின் உத்தரவின் பேரில் இதைச் செய்ததாக ஒப்புக்கொண்டார், ஆனால், பின்னர் தாமே எல்லாவற்றையும் சொந்தமாகத் தான் செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதெல்லாம் பிராங்க் விளையாட்டா?
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் இதையெல்லாம் ஒரு பிராங்க் விளையாட்டாகச் செய்ததாக ஒப்புக்கொண்டார். சிறுவனைக் கண்டித்து, குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் மகனின் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் 13 வயது சிறுவன் சொந்த பெற்றோரை மிரட்டி வந்த சம்பவம் பல பெற்றோர்களைக் கவலைக்குள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications