அனுதினமும் ஜிபிஎஸ் பயன்படுத்தும் நமக்கு இது தெரியாம போச்சே.!
உலகத்தின் கண்கள் குருடாகிவிட்டன. காதுகள் செவிடாகி விட்டன.
உலகத்தின் கண்கள் குருடாகிவிட்டன. காதுகள் செவிடாகி விட்டன. சில ஜோடி கண்களைத் தவிர நடவடிக்கைகளையும், நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவராசிகளையும் காப்பாற்றியாக வேண்டிய கடமைவேறு இருக்கிறது. கண்களும், காதுகளும் சோரம் போகாத ஒரு சிலர் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம். ஆலயந்தோறும் வேப்பிலை அடித்து கடவுளை அழைக்க முடியுமா. இல்லை அவசரத்தில் அத்தனை கோவில்களிலும் ஏறி இறங்கத்தான் முடியுமா. என்ன செய்யப்போகிறது உலகம் என்று, தலையை கசக்கியபோது மனித மூளையில் உற்பத்தியானதுதான் ஜி.பி.எஸ்.

புவியிடங்காட்டி, உலக இடநிலை உணர்வி, தடங்காட்டி என தமிழ் இதற்கு நாமகரணம் சூட்டியுள்ளது.ஆவேசம் அகலாத போராளிக்கு உளவாளியாக, திக்குத் தெரியாமல் திகைப்பவனுக்கு வழிகாட்டியாக ஜி.பி.எஸ் பயன்படுகிறது. மின்காந்த அலைகளை வாங்கியும், செலுத்தியும் செயற்கைகோள்கள் உதவியுடன் தகவல்களை இறக்குமதி செய்யும் ஒரு விஞ்ஞான வர்த்தக முதலாளி இது.உலக வல்லரசுகளையெல்லாம் உருவாக்கிய ஜி.பி.எஸ், தொழில்நுட்ப உலகத்தின் மூன்றாவது கண். பதுங்கு குழிகளையும், மொட்டைமாடியில் காயப்போட்ட துணியின் அழுக்கையும் கூட இது துல்லிமாகச் சொல்லிவிடும். ரகசியத்தை அம்பலப்படுத்தும் அச்சத்தையும் அதேநேரம் அத்தியாவசியத் தேவையாகவும் மாறி இருக்கின்ற ஜி.பி.எஸ். என்ற சமாச்சாரத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. எப்படி என்று கேட்கலாம். அது இப்படித்தான்....
1. நிலத்தில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் இருப்பதுபோல், ஆகாயத்திலும் அறிவியல் ஆக்கங்களின் நெருக்கடி உள்ளது. அந்தரத்தில் 2 ரிசர்வ் செயற்கைக் கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கைக் கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு செயற்கைகோள் வலுவிழக்கும்போது பைரன்னராக செயல்பட ரிசர்வ் செயற்கைகோள் உள்ளது. அதில் 24 ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்களும் கண்களைக் கசக்கிக்கொண்டு கண்காணித்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு 12 மணிநேரத்துக்கு ஒருமுறை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இது சுற்றிச் சுழலும்.
2. லோரன் மற்றும் டெக்கா நேவிகேஷன் இரண்டும் ரேடியோ அலைகள் மூலம் இயங்குவது. லாங்க் ரேஞ்ச் நேவிகேட்டர் என்பதன் சுருக்கமே லோரன் ஆகும். இரண்டாம் உலகப்போரில் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படைகளில் வில்லத்தனமான வேலை செய்த இந்த இரண்டும், ஜி.பி.எஸ் கருவியை உருவாக்க அடிப்படையாக அமைந்தன.
3.1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக் எனும் செயற்கைக்கோளை ரஷ்யா விண்ணுக்குச் செலுத்தியது. அமெரிக்க அறிவியலாளர்கள் அதன் வேகத்தை கண்காணித்து வந்தனர். செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கு இசைவாக இருந்த அதன் அலைகளின் வேறுபாடுகள் திகைக்க வைத்தன. டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி சுற்றுவட்டப்பாதையில் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வர காரணமாக அமைந்தன.பின்னாளில் அது கணினியில் முக்கியக் கோட்பாடாக மாறியது.ஜி.பி.எஸ் செயற்கைகோளில் எழுந்த அதிர்வெண் மாற்றங்கள் இடங்களைத் துல்லியமாக அறியப்பயன்பட்டன.
4. அமெரிக்கா தன் ராணுவ நடவடிக்கைகளுக்காக ஜி.பி.எஸ்ஸை முதன் முதலில் பயன்படுத்தியது. ஜ.பி.எஸ் இன் அறிமுகம் உலகளாவிய பனிப் போர்களுக்கு உந்துதலாகவும் மாறியது.
5. ஜி.பி.எஸ் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், நேவிகேஷன் சிஸ்டம்தான் கப்பல்களின் வழிகாட்டுதலுக்கு பயன்பட்டது. போர் மேகம் சூழும்போதோ, இயற்கை பேரிழிவுகள் நேரிடும்போதோ விமானப்படை நடவடிக்கைகளுக்கு, அதிவேகமாக செயல்படும் நேவிகேஷன் சிஸ்டத்தை உருவாக்க முடியுமா என்ற சிந்தனை, விஞ்ஞானிகளின் மூளையில் நெருப்பை பற்ற வைத்தது.இது ஜி.பி.எஸ் என்ற உளவாளியை உருவாக்க காரணமாக அமைந்தது
6.தொடக்க காலத்தில் ஜி.பி.எஸ், நவ்ஸ்டார் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. முதல் நவ்ஸ்டார் செயற்கைக்கோள் 1978 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. விண்ணுக்குச் செலுத்தப்பட்ட முதல் 10 செயற்கைக்கோள்களில் 9 மட்டுமே துணிந்து செயல்பட்டது. அடுத்தகட்டமாக முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட ஜி.பி.எஸ் செயற்கைக்கோள் 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு 11 ஆண்டுகால அறிவியலாளர்களின் உழைப்பு புதிய பரிமாணத்தை தோற்றுவித்தது.
7.விஞ்ஞான வளர்ச்சியை அறிந்து கொள்ளவோ, கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தவோ துயரமான சில நிகழ்வுகள் அவசியமாகின்றன. 1983 ஆம் ஆண்டு, 007 என்ற கொரிய விமானம் 269 பயணிகளுடன் ரஷ்யாவின் தடை செய்யப்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்தது. போர்மேகம் சூழ்ந்த அந்தப் பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் நெருப்புக்கோளமாக வெடித்துச் சிதறியது. பயணம் செய்த அத்தனை பேரும் ஆகாயத்திலேயே தகனம் செய்யப்பட்டனர். இந்த கோரமான நிகழ்வை அமெரிக்க மக்களுக்கு அறிவித்த அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன், மிலிட்டரிக்கு பயன்படும் நேவிகேஷன் செயற்கைக்கோளை நவீனப்படுத்த முயற்சி எடுத்தார். ஜி.பி.எஸ் என்ற நவீனமாக்கப்பட்ட கருவி பிறக்கவும், அறியவும் இந்த பேரழிவு காரணமாக இருந்தது.
8. தற்போது ஜி.பி.எஸ், பொதுமக்கள் கையில் சர்வசாதாரணமாகப் புழங்கும் கருவியாக மாறி விட்டது. உயர்தர மற்றும் அதிவேக அலைகளைக் கொண்ட ஜி.பி.எஸ், ராணுவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் 2000 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் துல்லியமான, துரிதமான ஜி.பி.எஸ் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
9. ராணுவத்துக்கு உளவு பார்க்க மட்டும்தான் ஜி.பி.எஸ்ஸை பயன்படுத்த முடியுமா என்ன என்ற ஆதங்கம் இருந்தது. 1996 ஆம் ஆண்டு ஜி.பி.எஸ் உலகத்தின் சாலைகளிலும் ஓடியது. திசைகாட்டுவதற்காக வாகனங்களில் முதன் முதலாகப் பயன்பட்டது.
10.இதுவரை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 31 செயற்கைக்கோள்கள் ரொம்ப ஆக்டிவாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது அங்கிங்கெணாதபடி தொழில்நுட்ப சாதனங்களில் ஜி.பி.எஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல்போன் மற்றும் வாகனங்களில் இன்றியமையாத தேவையாகவும், ஒரு கிரியா ஊக்கியாகவும் இருக்கிறது.
11. ஜி.பி.எஸ் ஒரு வழிகாட்டும் பொறிதானே என்று அலட்சியமாகக் கருதித் தொலைத்தால் அது தவறு. நேரத்தை துல்லிமாக கண்டறியக்கூட அது பயன்படுகிறது. ஜி.பி.எஸ் செயற்கைகோளும், அந்தக் கருவியும் அணுக்கடிகாரத்தையும், நேர சமிக்சைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.இந்த சமிக்ஞைகளைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் போன்களில் துல்லிமான நேரத்தை இடம்பெறச் செய்ய முடியும்.
12. மிகவும் பிரபலமான ஜி.பி.எஸ் காலணிகள் சந்தையில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன. இது பொதுமக்களின் பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குறி வைத்து இந்தக் காலணிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications