பாதி விலைக்கு தக்காளி விற்கும் Paytm ஆப்.. ஆர்டர் செய்வது எப்படி? ஒருவர் எத்தனை கிலோ வாங்கலாம்?
தாமதமான பருவமழை, கனமழை, வரத்து குறைவு மற்றும் சில காரணங்களால் இந்திய சந்தையில் தக்காளியின் விலை (Tomato Price) கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தலைநகர் ஆன டெல்லி உட்பட பல பல பகுதிகளில், 1 கிலோ தக்காளியின் விலை ரூ.150 வரை உயர்ந்துள்ளது.
சில இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளிக்கான இந்த நெருக்கடியை சற்றே சமாளிக்கும் ஒரு நடவடிக்கையை பேடிஎம் நிறுவனம் தன் கையில் எடுத்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஓஎன்டிசி (ONDC) என்று சுருக்கமாக அழைக்கப்படும ஓப்பன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் உடன் கூட்டும் சேர்ந்துள்ளது.

இந்த கூட்டணி, அதாவது பேடிஎம் ஓஎன்டிசி (Paytm ONDC) கூட்டணியானது - டெல்லி என்சிஆரில் உள்ள பயனர்களுக்கு - இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ( National Cooperative Consumers Federation of India - NCCF) மூலம் தக்காளியை 1 கிலோவிற்கு 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.
1 கிலோ தக்காளி ரூ.70 க்கு.. ஒருவர் மொத்தம் எத்தனை கிலோ வாங்க முடியும்? பேடிஎம் நிறுவனத்தின் இந்த முன்முயற்சியின் கீழ், பேடிஎம் பயனர்கள் ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக இரண்டு கிலோகிராம் தக்காளியை ரூ.140 ரூபாய்க்கு இலவச டெலிவரியின் (Free Delivery) கீழ் வாங்க முடியும்.
பேடிஎம் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பல பயனர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில நகரங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.200-ஐ தாண்டியுள்ளது, அப்படியான டெல்லி என்சிஆர் பகுதிகளில் நீங்களும் வசிக்கிறீர்களா என்றால்.. பேடிஎம் ஓஎன்டிசி வழியாக பாதி விலைக்கு தக்காளியை ஆர்டர் செய்வது எப்படி? என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும். பின்னர் சேர்ச் பாரில் (Search Bar) ஓஎன்டிசி (ONDC) என்று டைப் செய்து, ஓஎன்டிஸி ஃபுட் (ONDC Food) என்பதை கிளிக் செய்யவும். பின்னர் ஓஎன்டிஸி ஃபுட் பக்கத்தில், டொமோடோஸ் ஃப்ரம் என்சிசிஎஃப் (Tomatoes from NCCF) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பின்னர் நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் தக்காளியின் அளவைத் தேர்ந்தெடுக்கவும். அதை தொடர்ந்து எந்த முகவரிக்கு தக்காளிகள் டெலிவரி செய்யப்பட வேண்டுமோ அந்த முகவரியை உள்ளிடவும். பின்னர் உங்கள் கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆர்டருக்கான கட்டணத்தை செலுத்தவும். அவ்வளவு தான் உங்கள் ஆர்டர் உறுதி செய்யப்பட்ட மெசேஜை நீங்கள் பெறுவீர்கள்.
மீண்டும் நினைவூட்டும் வண்ணம், ஓஎன்டிசி வழியாக தக்காளியை ஆர்டர் செய்யும் போது, பேடிஎம் பயனர்களால் இலவச டெலிவரியுடன் 1 வாரத்திற்கு 2 கிலோ தக்காளியை மட்டுமே ரூ.140 க்கு வாங்க முடியும். இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கான ஒரு நற்செய்தி என்னவென்றால், என்சிசிஎஃப்-யின் வழிகாட்டுதல்களின்படி தக்காளியின் விலை மேலும் குறையக்கூடும் என்பதே ஆகும்.
இதுகுறித்து பேடிஎம் நிறுவனம், "தக்காளி போன்ற அத்தியாவசியமான பொருளின் மீதான விலை உயர்வு நாடு முழுவதும் பலரை பாதித்து வருகின்றன. என்சிசிஎஃ மற்றும் ஓஎன்டிசி இடையேயான இந்த ஒத்துழைப்பால், டெல்லி என்சிஆரில் உள்ள எங்கள் பயனர்கள் இப்போது தக்காளியை மலிவு விலையில், எளிதாகப் பெறலாம்" என்று கூறியுள்ளது.
ஓஎன்டிசி என்றால் என்ன? அறியாதோர்களுக்கு ஓஎன்டிசி என்று சுருக்கமான அழைக்கப்படும் ஓப்பன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் என்பது, நாட்டில் தற்போது உள்ள இ-காமர்ஸ் சுற்றுச்சூழலை ஜனநாயகப்படுத்துவதற்காக (Democratize the existing e-commerce ecosystem) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்க ஆதரவு முயற்சியாகும்.
பெங்களூரில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஓஎன்டிசி தனது இருப்பை டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, சென்னை, காஞ்சிபுரம், ஹைதராபாத், பாகல்கோட் மற்றும் லக்னோ ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. உணவு மற்றும் பானம், மளிகை பொருட்கள், வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள், ஃபேஷன், எலெக்ட்ரானிக்ஸ், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் அழகு சாதன பொருட்கள் என பல்வேறு வகையான தயாரிப்புகளை / பொருட்களை ஓஎன்டிசி வழியாக வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








