பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி: காரணம் என்ன?
சியோமி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்லவரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் உட்பட மேலும் 8 நிறுவனங்கள் சீன இராணுவத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி, அமெரிக்காஅவைகளை அரசு பிளாக் லிஸ்ட்டில் (BlackList) சேர்த்துள்ளது. எனவே இதற்குப் பிறகு அமெரிக்க முதலீட்டாளர்கள் தடுப்புப்பட்டியலில்உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ராய்ட்டர்ஸின் (Reuters) அறிக்கை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது அமெரிக்க முதலீட்டாளர்கள் இப்போது இந்த நிறுவனங்களின் ஷேர்ஸ் மற்றும் செக்யூரிட்டிஸ்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நவம்பர் 11-ம் தேதி 2021-க்குள் அவற்றில் இருக்கும் ஹோல்டிங்ஸ்களை விலக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

வெளிவந்த தகவலின்படி, டிரம்ப் நிர்வாகம் சியோமியை ஒரு கம்யூனிஸ்ட் சீன இராணுவ நிறுவனம் என்று நியமித்துள்ளது. அதன்படி கடந்த ஆணடு நவம்பர் மாதம் அமெரிக்கப் செக்யூரிட்டிஸ் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் "கம்யூனிஸ்ட் சீன இராணுவ நிறுவனங்களுக்கு" நிதியளிக்கும் முதலீடுகளை தடைசெய்ய கோரும் நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சியோமி நிறுவனத்துடன், விமான உற்பத்தியாளர் கமர்ஷியல் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா (கோமாக்) போன்ற பிற பெரிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்பின்பு சியோமி நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் ஒன்றான குவால்காம் வென்ச்சர்ஸ் சியோமி உடனான வணிகத்தை நிறுத்தினால் இந்த தடை சியோமி நிறுவனத்தை பெரிய அளவில், கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், கடந்த ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது என்னவென்றால், தென்சீனக் கடலில் சீனாவின் பொறுப்பற்ற மற்றும் போர்க்குணமிக்க நடவடிக்கைகள் மற்றும் அதன்
இராணுவமயமாக்கல் முயற்சிகள், உணர்திறன் வாய்ந்த அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான அதன் ஆக்கிரோஷமான உந்துதல் ஆகியவைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கும் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிஎன்பிசி வெளியிட்ட அறிக்கையின்படி, சியோமி நிறுவனத்தின் பங்குகள் இந்த பிளாக் லிஸ்ட் நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 10.6 சதவிகிதம் குறைந்துவிட்டன. பின்பு கடந்த 2020-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலகின் நம்பர் 3 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக ஆப்பிளை மிஞ்சிய சியோமி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications