36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக WhatsApp இருக்கிறது. வாட்ஸ்அப் பயனர்களின் தேவையறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேநேரத்தில் யாரும் இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருகிறது.
மாதாந்திர இணக்க அறிக்கை
மத்திய அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் எடுக்கும் நடவடிக்கையை இணக்க அறிக்கையாக சமர்பித்து வருகிறது. இணைக்க அறிக்கையில் தவறான வாட்ஸ்அப் கணக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயனர்கள் அளிக்கும் புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

36 லட்ச வாட்ஸ்அப் கணக்குகள் தடை
டிசம்பர் 2022, அதாவது ஒரே மாதத்தில் இந்தியாவில் 36 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக மெட்டாவுக்கு சொந்தமான மெசேஜிங் தளமான WhatsApp குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப் இந்த கணக்குகளை தடை செய்ய காரணம் என்ன, எதன் அடிப்படையில் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்களை பார்க்கலாம்.
தொடர் நடவடிக்கையில் WhatsApp
டிசம்பர் 1 2022 முதல் 31 டிசம்பர் 2022 இடையே ஆன காலக்கட்டத்தில் மட்டும் 3,677,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,389,000 கணக்குகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் WhatsApp நிறுவனம் டிசம்பரில் வெளியிட்ட இந்திய மாதாந்திர அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
பயனர்கள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை
இந்திய அரசின் உத்தரவுப்படி வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் தளத்தில் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் நடவடிக்கையை மாதாந்திர இணக்க அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் பயனர்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
மோசமான கணக்குகள் தடை
2022 டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் 36 லட்சத்துக்கும் அதிகமான "மோசமான" (Bad) கணக்குகளைத் தடை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது. IT விதிகளை மீறிய குறிப்பிட்ட கணக்குகள் தடை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 1,389,000 கணக்குகள் பயனர்களிடம் இருந்து எந்தவித அறிக்கையையும் பெறுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்கள் பாதுகாப்பு தான் முக்கியம்
WhatsApp செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்தியிடல் சேவையான வாட்ஸ்அப், துஷ்பிரயோகத்தை தடுப்பதில் முன்னணியில் இருக்கிறது. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு, நவீன தொழில்நுட்பங்களை செயல்முறையில் கொண்டு வர தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம் என கூறினார்.

பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள்
மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி, டிசம்பர் 2022க்கான எங்கள் நடவடிக்கையை அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள், சொந்த பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் வாட்அப் தளத்தில் இருந்து 3.6 மில்லியன் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
மாதந்தோறும் தொடரும் நடவடிக்கை
WhatsApp பகிர்ந்துள்ள அறிக்கையின்படி, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை மொத்தம் 36 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளது. வாட்ஸ்அப் தளத்தில் 1607 புகார்கள் பயனர்களிடம் பெற்றதாகவும் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப் இல் வரும் மோசடி தகவல் குறித்து எப்படி புகார் அளிப்பது என தெரியாமல் இருந்தால் அதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
வாட்ஸ்அப் இல் எப்படி புகார் செய்வது?
இந்தியாவில் தீங்கிழைக்கும் வாட்ஸ்அப் கணக்கிற்கு எதிராக எப்படி புகார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்கு சென்று ஹெல்ப்(உதவி) என்ற தேர்வை கிளிக் செய்து எங்களை தொடர்புகொள் (Contact Us) என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் உங்கள் புகார்களை பதிவு செய்து மெயில் ஆக அனுப்பலாம். ஒரு குறிப்பிட்ட கணக்கு குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த எண்ணுக்கான நாட்டின் குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
WhatsApp புகார் மெயில்
அதேபோல் பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் வழிவகை செய்திருக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிப்பதற்கு என வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது.அது [email protected] என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.

24/7 என்ற அடிப்படையில் கண்காணிக்கும் வாட்ஸ்அப்
தவறாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்குவதற்கு நிறுவனம் தனிச்சையாகவும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வாட்ஸ்அப் தெரிவிக்கையில் "தவறான கணக்குகளை விரைவாக கண்டறிந்து அதை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள், 24/7 என்ற அடிப்படையில் தவறான கணக்குகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான இயந்திர கற்றல் அமைப்புகள் தங்களிடம் உள்ளன" எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications