Samsung-ன் புது சிங்கக்குட்டி.. சின்ன டிஸ்பிளே, 50MP டெலி கேமரா, 5000mAh பேட்டரி உடன் புது Pro மாடல்!
கண்ணா ரெண்டாவது லட்டு சாப்பிடணுமா என்கிற படியாக சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து இரண்டு குட் நியூஸ் வந்துள்ளது. ஒன்று - சாம்சங் நிறுவனம் முற்றிலும் புதிய ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது - அந்த ப்ரோ மாடல் சாம்சங்கின் மிகவும் பிரபலமான எஸ் சீரீஸின் கீழ் வருகிறதாம். சாம்சங்கின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் எஸ் சீரீஸ் ஆன கேலக்ஸி எஸ்27 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவர இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. இதில் கேலக்ஸி எஸ்27 ப்ரோ என்கிற புதிய மாடல் அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் - திடீர் எதிர்பார்ப்புகளையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒரு புதிய லீக்கின் படி, இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கலாம் என்று தெரிகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.47-இன்ச் அல்லது 6.5-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். அதாவது இது கேலக்ஸி எஸ்27 அல்ட்ராவை விட குறிப்பிடத்தக்க அளவில் சிறியதாக இருக்கும்.
இந்த இடத்தில் தான் புது ப்ரோ மாடல் வந்தால் அல்ட்ரா மாடலுக்கு எந்த இடம் கிடைக்கும் என்கிற கேள்விகளும் எழுகின்றன. கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5,200mAh முதல் 5,500mAh வரையிலான சற்று பெரிய பேட்டரி இடம்பெறும் என்று முன்னர் வெளியான லீக்ஸ் தெரிவிக்கின்றன. ஆனால் பேட்டரி லைஃப் என்பது அதன் கெப்பாசிட்டியை மட்டும் சார்ந்தது அல்ல. ப்ரோ மாடலின் சிறிய டிஸ்பிளே, அன்றாட பயன்பாட்டில் குறைவான சக்தியையே பயன்படுத்தலாம்.
மேலும், சிறிய அமைப்பில் வெப்பத்தை சிறப்பாக கையாள, சாம்சங் சற்று மிதமான செயல்திறன் வடிவமைப்பையும் தேர்ந்தெடுக்கலாம். அப்படி நடந்தால், பேட்டரி திறன்கள் பேப்பரில் குறிப்பிடுவதை விட, நிஜ உலக சூழ்நிலைகளில் ஒப்பீட்டளவில் பெரிய இடைவெளி இருக்காது. சிப்செட்களும் இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட்டை தான் கேலக்ஸி எஸ்27 ப்ரோவும் பயன்படுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அதாவது, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிப்செட் மட்டத்தில் ஒரே மாதிரியான செயல்திறன் மேம்பாடுகளிலிருந்து பயனடையும்.
கேமரா விஷயமும் இதேபோலவே இருக்கலாம். கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா மாடலில் பயன்படுத்தப்படவுள்ள அதே ப்ரைமரி மற்றும் அல்ட்ரா-வைட் சென்சார் காம்பினேஷனை தான் சாம்சங் நிறுவனம் அதன் ப்ரோ மாடலுக்கும் கொண்டு வரக்கூடும் என்றும், அத்துடன் கூடுதலாக 50எம்பி 3.5எக்ஸ் ALoP டெலிஃபோட்டோ கேமராவையும் சேர்க்கக்கூடும் என்றும் லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுகையில் உள்ள அல்ட்ரா மாடல், அதன் 3எக்ஸ் 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸை நீக்கிவிட்டு, ப்ரைமரி 200எம்பி கேமராவிலிருந்து 5எக்ஸ் ஜூம் வரை சென்சார் க்ராப்பிங்கை நம்பியிருக்கும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அப்படியானால், எஸ்27 ப்ரோவின் பிரத்யேக 3.5எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா, அன்றாட புகைப்படங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும்.
சாம்சங் நிறுவனம், தனது எஸ் சீரீஸில் அல்ட்ரா மாடலை மிகச்சிறந்த கேமரா முதன்மை மாடலாக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை வெளிவந்துள்ள லீக்களின் அடிப்படையில், பெரும்பாலான பயனர்களுக்கு ப்ரோ மாடலே மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் சுவாரஸ்யமான தேர்வாக அமையக்கூடும் என்பது போல் தெரிகிறது. இதர விஷயங்கள் அறிமுகத்தின் போது தெரிய வரும். அந்நாளில் அறிவிக்கப்படும் விலை நிர்ணயம் - எதை வாங்கலாம் என்பதை தீர்மானிக்க உதவும் இன்னொரு முக்கிய காரணியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications